நேற்று ஜூலை காலை 7:00 மணி அளவில் அமலாக்கத்துறை தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை மேற்கொண்டது. சோதனைக்கு பிறகு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பொன்முடி மூன்று முப்பது மணி வரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டார் பொன்முடி.
இந்த நிலையில் திமுக வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களுக்கு கூறியது, நேற்று காலை தொடங்கி இரவு முழுக்க வைத்து விசாரித்து விட்டு மூன்றரை மணி அளவில் அமைச்சரை திருப்பி அனுப்புகிறார்கள். இதனால் பொன்முடி மன உளைச்சலுக்கும், உடல் உழைச்சலுக்கும் உள்ளாகி இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே உடல் ரீதியான பிரச்சனைகள் இருக்கிறது. அது எல்லாம் தெரிந்தும் ஸ்டேட்மென்ட் வாங்குகிறேன் என்ற பெயரில் அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற முறையில் செயல்படுகிறது. உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறை எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று வரையறுத்து இருக்கிறது. அதை எல்லாம் மீறி மனித உரிமை ஆணையமும் போன்றவற்றினுடைய வழிமுறைகள் எல்லாம் மீறி அமலாக்கத்துறை செயல்பட்டு இருக்கிறது.
விசாரணைக்கு நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆனால் அந்த ஸ்டேட்மென்ட்டை இரவோடு இரவாக வாங்குவதற்கு காரணம் என்ன? காலை வாங்கினால் மறைந்து விட போகிறதா, அல்லது அழிந்து விடப் போகிறதா. 2007 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு 2023 ஆம் ஆண்டு விசாரணை நடத்துவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமலாக்கத்துறை அலுவலகமோ அல்லது சித்திரவதை கூடமா. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள சொத்து குவிப்பு வழக்குகள், குட்கா வழக்குகள் அமலாக்கத்துறை கண்ணுக்கு தெரியாதது ஏன்.
அமைச்சர் பொன்முடி குறி வைக்கப்படுவதற்கு காரணம், அவர் ஆளுநரைத் தொடர்ந்து கொள்கை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தீவிரமாக எதிர்த்து வருகிறார். குறிப்பாக அமைச்சர் பொன்முடி புதிய கல்விக் கொள்கை, துணைவேந்தர் நியமனம் போன்றவற்றில் ஆளுநரை கடுமையாக எதிர்த்து வருகிறார். இதை தொடர்ந்து சென்ற வாரம் ஆளுநர் டெல்லி சென்றார், இந்த வாரம் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. யாரை பயமுறுத்த இந்த வேலை நடைபெறுகிறது. 2007 இல் பதிவு செய்த வழக்கிற்கு 2023 ஆம் ஆண்டு ஆவணங்களை தேடுவதாக கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இது மனிதாபிமானமற்ற செயல் என்று அமலாக்க துறையை கடுமையாக சாடினார்.