இத்தாலியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வலது சாரி கட்சியை சேர்ந்த ஜியோர்ஜியா மெலோனி வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இத்தாலி நாட்டில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார். எனினும், பொருளாதார நிலை மோசமடைந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தீர்மானித்த நிலையில், மரியோ டிராகி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முன் தினம் (செப்டம்பர் 25) இத்தாலி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் 60 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இரவு 11 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது. இதனை தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின.
அதில் ஜியோர்ஜியா மெலோனியின், ‘பிரதர்ஸ் ஆப் இத்தாலி’ கட்சி பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து இத்தாலியின் புதிய பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி பதவி ஏற்க உள்ளார். மேலும் அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் கிடைக்கப் பெற்றுள்ளார்.
-இந்த வெற்றி குறித்து ஜியோர்ஜியா மெலோனி கூறியதாவது;
இத்தாலி மக்கள் எங்கள் கட்சிக்கு பெருவாரியான ஓட்டுகள் அளித்து எங்கள் கட்சியை தேர்ந்தெடுத்து உள்ளனர். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவோம்.
-இவ்வாறு ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.