எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். நெடுஞ்சாலை டெண்டர் விடுவதில் தொடங்கி, பழங்குடியினருக்கான வீடுகள் கட்டும் திட்டம் வரை நிறைய குளறுபடிகள் நடத்திருப்பதாகவும் பேசியிருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க அரசில் டெண்டர் விதியெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் இவையெல்லாம் அம்பலமாகியுள்ளது. 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் நிறைய முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகள் மூலமே ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்துள்ளனர். ஒரே கணினி, ஒரே ஐபி அட்ரஸ் மூலமே அனைத்து டெண்டருக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.
3 ஆண்டுகளில் 907 டெண்டர்கள் கோரப்பட்டதில் மோசடி நடந்ருக்கிறது. அவருக்கு நெருக்கமானவர்களுக்கே அனைத்து டெண்டர்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. பட்டியிலின மக்களுக்கான இலவச வீடுகள் கட்டும் திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் விளம்பரம் வெளியிட்டதில் ரூ.2.18 கோடி முறைகேடு நடந்துள்ளது.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பழங்குடியினருக்கான 60 சதவீத வீடுகள், சம்பந்தப்பட்டவர்களை சென்றடையவில்லை. 5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளன. தகுதியற்ற பயனாளிகளுக்கு 3,354 வீடுகள் முறைகேடாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார் அமைச்சர்.
இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அரசு, மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கும், வழங்குவதற்கும் எந்த காலமுறையையும் பின்பற்றவில்லை என்பதை கண்டறிந்துள்ளது.
2017- 2020ம் ஆண்டு வரை 80 சதவீத மாணவர்கள் மட்டுமே படிக்கும்போது மடிக்கணினிகள் பெற்றுள்ளதாகவும், பலருக்கு மிகவும் தாமதாமாக படிப்பு முடிந்த பின்னர்தான் வழங்கப்பட்டிருப்பதாகவும் சி.ஏ.ஜி அறிக்கை சொல்லியிருப்பதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.
எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது ஆட்சிக்கு வந்தால் ஊழல் வழக்கு தொடரப்படும் என்று தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் எடப்பாடிக்கு நெருக்கமான அ.தி.மு.க அமைச்சர்கள் வீட்டில் சில முறை ரெய்டு நடத்தப்பட்டது.
ஒவ்வொரு முறை ரெய்டு நடைபெறும்போது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று செய்திகள் பரவும். ஆனால், ரெய்டின் முடிவில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று மூன்றாவது பக்கத்தில் செய்தி முடங்கிப் போகும். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டாலும், செயல்பாட்டில் கொண்டு வரமுடியவில்லை.
எடப்பாடி அரசு மீதான அனைத்து குளறுபடிகளுக்கும் சி.ஏ.ஜி அறிக்கையை மட்டுமே சுட்டிக்காட்டும் அமைச்சர், கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய முறைகேடுகள் குறித்து தி.மு.க அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தவேண்டும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.