அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியை விட திமுகவின் 2 ஆண்டு ஆட்சியில் அதிகம் மின் இணைப்பு : திருச்சியில் முதல்வர் பெருமிதம்!
திருச்சியில் வேளாண் சங்கமம் என்ற பெயரில் கேர் கல்லூரி வளாகத்தில் வேளாண் கண்காட்சி 2023-யை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், திமுக ஆட்சியில் உழவர்கள் நலன் காக்கப்பட்டு வருகிறது. வேளாண் துறையை வளர்க்க நிதியும் நீர் வளமும் அதிகம் தேவை. நிதியைப் பெருக்க அரசு பல்வேறு சலுகைகளின் திட்டங்களையும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
திமுக அரசு அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் கவனம் செலுத்தி வருகிறது. குறுவை சாகுபடி கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. தற்போதைய ஆண்டில் 5.36 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளோம். உழவன் செயலி விவசாயிகளின் நலன்களை காத்து வருகிறது. உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைத்து இருக்கிறது. ஒன்றிய அரசு வழங்கும் விவசாயிகளின் சலுகைகள் விட தமிழ்நாடு அரசு அதிகப்படியான சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 6.5 லட்சம் விவசாயிகள் பலனடைந்து இருக்கின்றனர்.10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி ஏற்படுத்திய மின் இணைப்புகளை விட திமுக ஆட்சி பதவி ஏற்ற இரண்டு ஆண்டுகளில் அதிக மின் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விளைச்சலைப் பெருக்கவும் பாரம்பரிய நெல்களை மீட்டெடுக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறோம். குறுவை சிறப்பு தொகுப்பு வழங்க ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை கால நீடிப்பு செய்யப்படுகிறது என்றும் கூறினார்.
தொடர்ந்து நலத்திட்டங்கள் சரியாக பயனாளர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். உழவர் உற்பத்தியாளராக மட்டுமல்லாமல் விற்பனையாளராக மாற வேண்டும். அதற்காகவே உழவர் சந்தை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆறாண்டுகளில் 119.96 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.