யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் தெளிவாக இருக்க வேண்டும்: எம்.பி. சத்ருகன் சின்ஹா அதிரடி!
எதிர்க்கட்சி சார்பிலான பிரதமர் வேட்பாளர் யார் என்று பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்று நடிகராக இருந்து அரசியல்வாதியான சத்ருகன் சின்ஹா கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான சத்ருகன் சின்ஹா, தமது கட்சித் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஒரு நல்ல தலைவர் என்றும், அடுத்த பொதுத் தேர்தலில் ஏற்படும் அரசியல் மாற்றத்தில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் குறிப்பிட்டார்.
பா.ஜ.க. ஒருவர் தலைவர், இரண்டு வீர்ர்கள் கொண்ட கட்சியாக மாறிவிட்டது. எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி காலம் முடிந்துவிட்டது என்றும் சின்ஹா குறிப்பிட்டார். (முன்பு பாஜகவிலில் இருந்த சத்ருகன் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அக்கட்சியிலிருந்து விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது.)
நாட்டை ஆளப்போகும் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழத்தொடங்கிவிட்டது. நேரு காலத்திலேயே இதே கேள்வி எழுந்தது. எனவே இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளர் யார் என்று பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. யார் பிரதமராக வரக்கூடாது என்பதில்தான் தெளிவாக இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரான சக்ருகன் சின்ஹா கூறினார்.
2019 ஆம் ஆண்டு பாட்னா சாகிப் மக்களவைத் தொகுதிக்கு சின்ஹா போட்டியிட்டார். ஆனால், ஹாட்ரிக் அடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவினார். ராகுல் காந்தி ஒரு சிறந்த தலைவர் என்பது எனது கருத்தாகும். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு தலைமை ஏற்க அவர் சிறந்த தலைவரா என்பதை விவாதித்துதான் முடிவு செய்ய வேண்டும்.
பிகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது எனக்கு மரியாதை உண்டு. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க அவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால், பிரதமர் களத்தில் தாம் இல்லை என்பதை அவரே தெளிவுபடுத்திவிட்டார் என்று சின்ஹா குறிப்பிட்டார்.
தேஜஸ்வி யாதவ் பிகார் முதல்வராக வருவது குறித்து கருத்து தெரிவித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக முடியும் என்றால் இளம் தலைவரான தேஜஸ்வி, பிகார் முதல்வராவதில் என்ன பிரச்னை என்று கேட்டார். மக்கள் ஆதரவு இருந்தால் எவரும் அரசியலில் முன்னிலைக்கு வரமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிவசேனை கட்சி விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், இப்போதுதான் ஆட்டம் தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் மூலம் அவருக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் எனக்கும் உடன்பாடுதான் என்றார் சத்ருகன்.
ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா என அங்கீகரித்து அந்த அணிக்கு கட்சியின் பெயரையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி உச்சநீதிமன்றம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.