பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு திடீரென புதிய பொறுப்பை ஓ.பன்னீர் செல்வம் அறிவிக்க, கோபமடைந்த எடப்பாடியார் உடனடியாக அவரை கட்சியைவிட்டு நீக்கும் அதிரடி உத்தரவை பிறப்பித்தது அதிமுகவினரிடையே பரபரப்பை கிளறியுள்ளது.
அதிமுகவின் அரசியல் ஆலோசகராகரும், மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று முதல் அதிமுக ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியியிட்டார்.
``கட்டுப்பாடுகளை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்'' என அடுத்த சில நிமிடங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதிரடி காட்டினார் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள்..
பண்ருட்டி ராமச்சந்திரன் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக என பல்வேறு கட்சிகளில் தனது அரசியல் பயணத்தைத் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தத்தக்கது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையிலும், அதன்பிறகு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அமைச்சரவையிலும் மின்சாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.
பாமகவின் முதல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தான். அதுமட்டுமல்ல, விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்தபோது அந்தக் கட்சியின் அவைத்தலைவராக, முக்கியத்தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தார். 2013-ம் ஆண்டு தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் கடந்த 2014-ம் ஆண்டு அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.
2016 தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஒற்றைத்தலைமை விவகாரம் அரசியல் காலத்தில் பரபரப்பை கிளப்பிய போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில கருத்துக்களைப் பேசிவந்தார்.
தற்போது ஓபிஎஸ் அணியில் இணைத்துள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன், இது அதிமுக அரசியல் களத்தில் சூடுகிளப்பி வருகிறது. புரட்சி தலைவர் எம்.ஜி.யாருக்கு நெருக்கமானவர் பண்ருட்டியார் என்பதால் அதிமுகவினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.