ராகுல் காந்தி தேசவிரோத சக்திகளின் கருவியாக செயல்படுகிறார்: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!
கடந்த சில நாட்களாகவே ராகுல்காந்தியின் லண்டன் பேச்சு நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், நாடாளுமன்றத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் வெளிநாட்டு மண்ணில் இழிவுபடுத்தி பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வினரும் கோரி வருகின்றனர்.
ராகுல் எந்த மொழியில் பேசினாரோ அதே மொழியில்தான் இந்தியாவுக்கு எதிரானவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேசி வருகின்றனர் என்று குறிப்பிட்ட மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பா.ஜ.க.வினரின் கோரிக்கையை தாமும் வலியுறுத்துவதாக கூறினார்.
சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ராகுல்காந்தி, பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த உரையாடலின்போது இந்தியாவில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கப்படுவதில்லை. பேச முற்பட்டாலும் மைக்குள் அணைக்கப்படுகின்றன என்று சரமாரியாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
ராகுல் பேச்சுக்கு பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், சிலர் வெளிநாட்டில் இந்தியாவின் ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய ஜனநாயகத்தை யாராலும் பலவீனப்படுத்த முடியாது. ஆனாலும் சிலர் இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்த முயற்சித்து வருகின்றனர் என்று பதில் கூறியிருந்தார்.
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தாலும் காங்கிரஸ் அதற்கு வளைந்துகொடுக்கத் தயாராக இல்லை. ராகுல் காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டார். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று எதிர்க்கட்சியினரான நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதை திசைத்திருப்பும் வகையில் ஒருசதித்திட்டத்துடன் ஆளுங்கட்சியினர் நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கி வருகின்றனர். மோடி பலமுறை வெளிநாடுகளில் இந்தியத் தலைவர்களை விமர்சித்து பேசியிருக்கிறார். ஆனால், அவர் ஒருமுறைகூட மன்னிப்பு கேட்கவில்லை. எனவே ராகுல் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
இதனிடையே பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, வெளிநாட்டில் இந்தியாவையும் ஜனநாயகத்தையும் இழிவுபடுத்தி பேசியுள்ளதன் மூலம் ராகுல்காந்தி எம்.பி. தேசவிரோத சக்திகளின் கருவியாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, இன்னும் சொல்லப்போனால் இந்தியா நெருக்கடியான காலகட்டங்களை சந்தித்த போதிலும் இந்திய தலைவர்கள் எவரும் வெளிநாட்டினரை நமது விவகாரத்தில் தலையிடுமாறு கேட்கவில்லை.
ஆனால், ராகுல்காந்தி, இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறி இந்தியாவை இழிவுபடுத்தியதுடன், வெளிநாட்டு தலைவர்கள் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளார். இது முற்றிலும் தவறானதாகும். இதற்காக ராகுல்காந்தி மன்னிக்க வேண்டும் என்று டுவிட்டரில் ஜே.பி.நட்டா பதிவிட்டுள்ளார்.
இந்திய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டு சமரசம் செய்யுமாறு வெளிநாட்டினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளீர்களே உங்கள் எண்ணம்தான் என்ன? இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதார சக்தியாக விளங்கி வருகிறது. ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இந்தியாவில் நடைபெறுகிறது. அப்படியிருக்கும்போது இந்தியாவை இழிவுபடுத்தி வெளிநாட்டில் பேசவேண்டிய அவசியம் என்ன என்றும் ராகுலுக்கு நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
130 கோடி மக்கள் ஆதரவு மற்றும் தேர்தல் மூலம் கிடைத்த பெரும்பான்மையுடன் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். அப்படியிருக்கையில் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று பேசியுள்ளீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று ராகுலிடம் கேள்வி எழுப்பினார் ஜே.பி.நட்டா.