கமல்நாத்தின் ஆசை நிறைவேறுமா?

கமல்நாத்தின் ஆசை நிறைவேறுமா?

காங்கிரஸ் கட்சியில் சுறுசுறுப்பான தலைவர்களில் ஒருவர் கமல்நாத். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் இருந்திருக்கிறார். மூத்த தலைவரான இவர் இதுவரை 9 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து கம்ல்நாத் முதல்வரானார். ஆனாலும் இளய தலைவர்களில் ஒருவாரன ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுடன் அடிக்கடி கருத்துமோதல் ஏற்பட்டு வந்ததால் ஆட்சியில் வெகுநாள் நீடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜோதிர் ஆதித்யசிந்தியா உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தனர். பெரும்பான்மை இல்லாமல் கமல்நாத் ஆட்சியை இழந்த நிலையில் அங்கு பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. சிவராஜ் சிங் செளஹான் மீண்டும் முதல்வரானார்.

அடுத்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி கவிழக் காரணமாக இருந்த எம்.ஏ.எல்.ஏக்களை தோற்கடிப்பதே தமது லட்சியும் என்று கூறிவருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், வரும் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும். முதலமைச்சரை மாற்றும் பா.ஜ.க.வின் உத்தி பலிக்காது. காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா மீண்டும் காங்கிரஸுக்கு வரவாய்ப்புள்ளதா என்று பலரும் கேட்கின்றனர். தனிப்பட்ட நபர்கள் பற்றி கருத்துகூற நான் விரும்பவில்லை. ஆனால், துரோகிகளுக்கு மீண்டும் கட்சியில் இடம் இல்லை. ம.பி. காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்றார்.

மேலும் 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்திதான் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று கூறி தனது ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி, அரசியல் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற நோக்குடன் ஒற்றுமை யாத்திரை நடத்தவில்லை. மக்களை ஒன்றுபடுத்துவதுதான் அவரின் நோக்கமாகும்.

இந்த யாத்திரை முக்கியத்துவம் வாய்ந்தது. வரலாற்றில் இதுபோல் நீண்ட யாத்திரைநடந்ததாகத் தெரியவில்லை. காந்தி குடும்பத்தினர் நாட்டுக்கு செய்த தியாகம் அளவிட முடியாதது.

2024 மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் முகமாக மட்டும் ராகுல் காந்தி இருக்கமாட்டார். எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுலின் ஒற்றுமை யாத்திரையை சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ராஷ்ட்ரிய லோகதளம் கட்சித் தலைவர் ஜெயந்த் செளதரி உள்ளிட்டோர் கண்டு கொள்ளவில்லை.

தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பிரதமர் கனவில் மிதந்து வருகின்றனர். அப்படியிருக்கையில் கமல்நாத் ஆசை நிறைவேறுமா என்பது தேர்தல் நேரத்தில் தெரிந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com