

நீண்ட வருடங்களாக நடைபெற்று வரும் வழக்குகளில் ஒன்று முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு உள்ளது.
2006-2011 ஆம் ஆண்டுகளில் வானூர் தாலுகா, பூத்துறை கிராமத்தில் அனுமதியை மீறி அளவுக்கு அதிகமாகச் செம்மண் அள்ளி ரூ.28.36 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, 16 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற வழக்கில் 8 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு லோகநாதன் என்பவர் ஏற்கனவே மறைந்த நிலையில் மீதமுள்ள பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, சதானந்தம் உள்ளிட்ட 7 பேரும் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் 3 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த திமுக ஆட்சியில் விதிகறை மீறி செம்மண் குவாரி நடத்த முன்னாள் அமைச்சர் பொன்முடி அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக செம்மண் எடுத்ததின் மூலம் அரசுக்கு ரூபாய் 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் பொன்முடி உள்ளிட்ட ஏழு பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்காத காரணத்தினால் பொன்முடி விடுதலை என விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அரசுத் தரப்பு சாட்சிகள் சுமார் 30 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிய சூழலில், விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.