

தமிழ்நாடு முழுவதும் அரசு விதிமுறைகளை மீறி, அளவுக்கு அதிகமாக மலைகளை வெட்டும் போக்கு நீண்ட காலமாகவே காணப்படுகிறது. விதிமுறைகளின் படி குறிப்பிட்ட அளவு மட்டுமே மலைகளை உடைக்க வேண்டும். ஆனால், விதிமுறைகளை மீறி பெரிய அளவில் மலைகளை உடைப்பதால் பசுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு , அடுத்த தலைமுறையினருக்கு அனுபவிக்கக் கூடிய வகையில் வளங்கள் எதுவும் இருக்காது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அமைச்சரவையில், கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் பிரபு , விதி மீறல்களில் ஈடுபடும் கல் குவாரிகளின் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார். அமைச்சர் பிரபுவின் எச்சரிக்கைக்கு பின்னர் , மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கல்குவாரிகளில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும் , அரசு அனுமதித்துள்ள அளவைவிட பல மடங்கு கனிமங்கள், அண்டை மாநிலங்களுக்கு வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக புகார்களும் வந்த வண்ணம் இருந்தன.
இதில் முக்கியமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளையும் அரசு வகுத்துள்ள நெறிமுறைகளையும் மீறி, செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர். கிடைக்கப்பட்ட புகார்களின் அடிப்படை முகாந்திரங்களை ஆராய்ந்து, மாநிலம் முழுக்க உள்ள கல்குவாரிகளில் தீவிரமான சோதனைகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதற்காக அதிகாரிகள் அடங்கிய தனிப்படையினர் தென்காசி மாவட்டம் முழுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சோதனையில் முதற்கட்டமாக 18 கல்குவாரிகள் அரசு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளையும் மீறி , அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரம்பினை மீறி , மிகவும் ஆழமாகவும் சட்டவிரோதமான முறையிலும் கனிம வளங்களை வெட்டி எடுத்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் முறையான எந்தவித ஆவண பராமரிப்பும் இன்றி, வெடிபொருட்களை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தி வந்ததும் கண்டறியப்பட்டது .
விதிமுறைகள் மீறல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டது, வெடி மருந்துகளை முறையாக பராமரிக்காதது, அதற்கு உரிய அனுமதி பெறாதது என பலவிதமான விதிமீறல்களில் கல்குவாரி உரிமையாளர்கள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அனைத்து கனிம வளங்களை பாதுகாக்கும் நோக்கிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலை அழிக்கும் வகையில் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமைச்சர் பிரபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மூடப்பட்ட 18 கல்குவாரிகளும் தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வந்தவை.
கல்குவாரி மூடல்கள் குறித்து கருத்து அமைச்சர் பிரபு "தமிழகத்தில் இயற்கை வளங்களை சுரண்டும் எந்த ஒரு சட்ட விரோத நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் அனுமதிக்காது. அரசின் பாதுகாப்பு விதிகளை மீறும் குவாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குவாரிகள் தற்போது தற்காலிகமாக மூடப்படுவதுடன் சட்ட விரோதமாக எடுக்கப்பட்ட கனிமங்களின் அளவிற்கு ஏற்ப கடுமையான அபராத தொகை வசூலிக்கப்படும். இது போன்ற முறைகேடுகள் மீண்டும் தொடர்ந்தால் குவாரி நிறுவனங்களின் லைசன்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்" என்று முன்பே எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தென்காசி மாவட்டத்தை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.