

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களில் தவிர்க்க முடியாதவராக வலம் வருபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். வளர்ந்து வரும் இளம் நடிகராக பிரதீப் ரங்கநாதனின் பெயரை கேட்டாலே இளசுகள் துள்ளல் போட ஆரம்பித்து விடும். இவர் நடிகர் மட்டுமல்ல, திரைப்பட இயக்குநரும் கூட. ஆனால் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் தற்போது முழுநேர நடிகராக மாறி வருகிறார்.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 17ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம், ‘டியூட்’. காமெடி கலந்த இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன், பரிதாபங்கள் ராகுல், ரோகிணி, நேகா ஷெட்டி, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கவுள்ள இந்த படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக சில முரண்பாடுகள் இருந்தாலும் இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் வசூலையும் குவித்து வருகிறது.
இப்படம் வெளியாகி முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ.22 கோடியையும், இரண்டு நாட்களில் ரூ.45 கோடியையும், 5 நாட்களில் ரூ.95 கோடியையும் வசூலித்திருந்தது.
இந்தநிலையில், 27 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது.
2019-ம் ஆண்டு வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்து 2022-ல் லவ்டுடே படத்தை இயக்கி, இதில் நாயகனாகவும் நடித்தார். இந்தப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்தது. அதனை தொடர்ந்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் இவரது நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படமும் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்போது டியூட் படமும் ரூ.100 வசூலித்துள்ளது. இதன் மூலம் பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து மூன்று முறை 100 கோடி ரூபாய் வசூலித்த ஹீரோ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் தொடர்ந்து படங்களை கொடுத்து வரும் பிரதீப் ரங்கநாதனுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகி இருக்கிறது.
'டியூட்' திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வரும் அதேவேளையில் இந்த படத்தில் தனது இரண்டு பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசைஞானி இளையராஜா படக்குழு மீது காப்புரிமை மீறல் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.