40 முதல் 50 விண்வெளி வீரர்களை தயார் செய்ய வேண்டும் : விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவிடம் பிரதமர் மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை புது டெல்லியில் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லாவைச் சந்தித்தார்.
கேப்டன் சுபான்ஷு சுக்லாDPR PMO
Published on

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணித்த முதல் இந்திய விண்வெளி வீரரான குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா, அக்ஸியம்-4 விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியதும், பிரதமர் நரேந்திர மோடியை புது தில்லியில் சந்தித்து உரையாடினார்.

இந்த உரையாடலின்போது, இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் உலக அளவில் பெரும் கவனத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளதாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.

இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவின் எதிர்கால விண்வெளிப் பயணங்கள், குறிப்பாக ககன்யான் திட்டம் மற்றும் பாரதிய அந்தரிக்ஷ நிலையம் ஆகியவற்றுக்கு, 40 முதல் 50 விண்வெளி வீரர்கள் கொண்ட ஒரு குழுவை இந்தியா தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

விண்வெளியில் இந்தியா தலைமைப் பங்கு வகிக்கும் திறன் மற்றும் நிலையைப் பெற்றுள்ளது என்றும், மோடி தலைமையிலான அரசின் தொடர்ச்சியான ஆதரவு இதற்குக் காரணம் என்றும் சுபஞ்சு சுக்லா பிரதமரிடம் தெரிவித்தார்.

சந்திரயான்-2 தோல்வியடைந்த போதும், அரசு உறுதியான ஆதரவை அளித்ததுதான் சந்திரயான்-3-ன் வெற்றிக்கு வழிவகுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

விண்வெளியிலிருந்து திரும்பிய பிறகு ஏற்படும் மாற்றங்கள் குறித்துப் பிரதமர் கேட்டதற்கு, விண்வெளியில் இதயத் துடிப்பு கணிசமாகக் குறையும் என்றும், நான்கு முதல் ஐந்து நாட்களில் உடல் அந்தச் சூழலுக்குப் பழகிவிடும் என்றும் கூறினார்.

பூமிக்குத் திரும்பியதும் மீண்டும் அதே மாற்றங்கள் ஏற்படும். எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்திருந்தாலும், முதலில் நடப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும், அவர் தடுமாறியபோது மற்றவர்களின் உதவியுடன் தான் நடந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த அனுபவம், விண்வெளிப் பயணத்திற்கு உடல் பயிற்சி மட்டுமல்ல, மனப் பயிற்சியும் அவசியம் என்பதை உணர்த்தியது என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அத்துடன், போர் விமான காக்பிட்டுகளை விட விண்வெளியில் உள்ள கேப்சூல் சிறப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுபான்ஷு சுக்லா தனது பயணத்தின்போது, சர்வதேச குழுவினரான பெக்கி விட்சன் (அமெரிக்கா), ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னிவ்ஸ்கி (போலந்து), மற்றும் டிபோர் கபு (ஹங்கேரி) ஆகியோருடன் இணைந்து 60-க்கும் மேற்பட்ட சோதனைகள் மற்றும் 20 கல்வி அமர்வுகளில் கலந்துகொண்டார்.
Science from space
விண்வெளியில் உணவு

விண்வெளியில் உணவு ஒரு பெரிய சவால் என்பதால், அங்கு எளிமையாக வளரக்கூடிய பயிர்களை வளர்ப்பது குறித்து அவர் மேற்கொண்ட சோதனை குறித்தும் பிரதமரிடம் விளக்கினார்.

இந்த ஆராய்ச்சி, விண்வெளி பயணங்களுக்கு மட்டுமல்லாமல், பூமியில் உள்ள உணவுப் பாதுகாப்பையும் மேம்படுத்த உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சுக்லாவின் குழுவினர் ககன்யான் திட்டத்தைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருந்ததாகவும், சிலர் அதன் ஏவுதலுக்கு அழைப்பு வாங்குவதற்காக கையெழுத்துப் பெற்றதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம், இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கு உலக அளவில் இருக்கும் வரவேற்பு தெளிவாகத் தெரிந்தது.

சுக்லா தனது சிறுவயதில் விண்வெளி வீரராகும் கனவு காணவில்லை என்றும், அப்போதைய சூழ்நிலை அப்படி இருந்ததாகவும் கூறினார்.

ஆனால், தனது பயணத்திற்குப் பிறகு மாணவர்களுடன் மூன்று முறை உரையாடியபோது, ஒவ்வொரு முறையும் ஒரு குழந்தை "நான் விண்வெளி வீரராவது எப்படி?" என்று கேட்டதாகக் கூறி நெகிழ்ந்தார்.

“இன்று இந்தியக் குழந்தைகள் கனவு காண வேண்டிய அவசியமில்லை, அவர்கள் விண்வெளிக்குச் செல்ல முடியும் என்பதை அறிவர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தனது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய சுக்லா, தான் விண்வெளியில் எடுத்துச் சென்ற தேசிய மூவர்ணக் கொடியையும், அக்ஸியம்-4 மிஷன் பேட்சையும் பிரதமருக்குப் பரிசாக வழங்கினார்.

கேப்டன் சுபஞ்சு சுக்லா பாரதப் பிரதமருடன்
கேப்டன் சுபஞ்சு சுக்லாபடம் : NDTV

அந்தப் பேட்சில் பூமி ஒரு பென்டகான் மையத்தில் இருப்பதும், நான்கு விண்வெளி வீரர்களின் பெயர்கள், அவர்களின் தேசியக் கொடிகள் மற்றும் ஏழு கண்டங்களைக் குறிக்கும் ஏழு நட்சத்திரங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விண்வெளி வீரர் சுப்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடியின் சந்திப்பு
விண்வெளியில் இந்தியாவின் பெருமை!PIC: Shubhanshu Shukla X தளம்

திங்கட்கிழமை இந்தியா வந்த சுக்லாவை, டெல்லி விமான நிலையத்தில் யூனியன் அறிவியல் மந்திரி ஜிதேந்திர சிங் மற்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் வரவேற்றனர்.

அவர் ஹூஸ்டனில் சில நாட்கள் தங்கி, பூமியின் ஈர்ப்புக்குத் தன்னை மீண்டும் பழக்கப்படுத்திக் கொண்ட பிறகுதான் இந்தியா திரும்பினார்.

இந்தச் சந்திப்பு, இந்தியாவின் விண்வெளித் துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிப்பதோடு, வருங்கால தலைமுறையினரின் கனவுகளுக்கு ஒரு புதிய பாதையை வகுத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com