
2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளரை முன்னிருத்துவதை காங்கிரஸ் எதிர்க்கிறது என்று அக்கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
முதலில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன் பின் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி பிரதமர் யார் என்பதை தேர்ந்தெடுப்பார்கள். இதுதான் சரியானது. இதுதான் எதிர்க்கட்சி கூட்டணி தேர்தலுக்கு முன் ஒன்றாக இருப்பதை உறுதி செய்யும் என்றும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கார்கே கூறினார்.
மாநிலத் தேர்தல்கள் கட்சிக்கு முக்கியமானவை என்பதை விளக்க பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட அனைத்து கட்சியினரிடமும் பேசி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்தியா எதிர்க்கட்சி கூட்டத்தை ஒத்திவைத்திருப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் கூட்டணியைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை கார்கே வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பிரிவுகள், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி சேர்வதை எதிர்ப்பதாக அவர் தெளிவுபடுத்தினார்.
கேரளத்தில் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் போட்டியாளர்களாக இருக்கும் நிலையில் தேசிய அளவில் இரு கட்சிகளும் இணைந்து போராட முன்வந்துள்ளதுபோல் ஆம் ஆத்மி கட்சியும் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை முன்னிருத்துவதில்லை என்ற நிலையை கார்கே தெளிவுபடுத்தியதிலிருந்து பிரதமர் பதவிக்கு ராகுல் போட்டியில்லை என்பது தெளிவாகிறது.
பிரதமர் வேட்பாளராக காட்டிக்கொள்ள ராகுல் விரும்பவில்லை என்பதை கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்க்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதிலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட வைப்பதிலுமே காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகிறது என்று கார்கே தெரிவித்துள்ளார்.