இந்திய நர்சிங் மாணவியை உயிரோடு புதைத்த சைக்கோ காதலன்!

இந்திய நர்சிங் மாணவியை உயிரோடு புதைத்த சைக்கோ காதலன்!

ந்தியாவைச் சேர்ந்த நர்சிங் மாணவியான ஜாஸ்மின் கவுர் என்பவர், ஆஸ்திரேலியாவில் தனது சைக்கோ காதலனால் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவிலிருந்து பல மாணவ மாணவிகள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்பது சகஜம்தான். குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என பல நாடுகளில் கணிசமான இந்தியர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நர்சிங் படித்து வரும் இந்திய இளம் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின் ஃபிளான்டர்ஸ் ரேஞ்சர்ஸ் என்ற பகுதியில், இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான ஜாஸ்மின் கவுர் என்ற நர்சிங் மாணவி, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையை அவரது முன்னாள் காதலனான தாரிக் ஜோத்சிங் என்பவர்தான் செய்தார் என்பது அடையாளம் காணப்பட்டது. ஜாஸ்மின் கவுரை பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலையை அவர் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இது சார்ந்த வழக்கு நடந்து வந்த நிலையில், இந்த ஆண்டு கொலையாளி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

தாரிக்ஜோத் சிங்கும் ஜாஸ்மின் கவுரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் சில காரணங்களால் இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாத தாரிக்ஜோத், ஜாஸ்மினை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். பலமுறை ஜாஸ்மின் வேண்டாம் என்று சொல்லியும் அவரை தொடர்ந்து பின்தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளார். 

ஜாஸ்மின் அடிலெய்டில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்த நிலையில், அங்கிருந்து அவரைக் கடத்தி காரின் பின் பக்கம் லாக் செய்து, சுமார் 4 மணி நேரம் வண்டியை ஓட்டிச் சென்றுள்ளான் கொலையாளி. பின்னர் ஃபிளான்டர்ஸ் மலைத்தொடர்களில் கண்களைக் கட்டி, உடலையும் கேபிள்களால் கட்டியுள்ளான். அதன் பிறகு அங்கேயே குழி தோண்டி உயிருடன் ஜாஸ்மினைப் புதைத்துள்ளான் அந்தக் கொடூர சைக்கோக் காதலன். 

இந்த கொலை பற்றி விவரித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், " அந்த அப்பாவிப் பெண்ணை உயிருடன் புதைத்ததால், ஜாஸ்மினுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை விழுங்கி மூச்சுத்திணறி அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதுபோன்ற மரணம் உலகில் யாருக்கும் வரக்கூடாது. இது ஒரு கொடூரமான சம்பவம். உயிர் இழக்கும் தருவாயில் ஒவ்வொரு நொடியும் அந்த பெண் மிகப்பெரிய துன்பத்தை அனுபவித்திருக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார். 

எனவே இந்தக் கொடூரக் கொலையை செய்த நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தற்போது இதுசார்ந்த தகவல்கள் வெளிவந்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com