

அக்., 1 ஆயுதபூஜை, 2ம்தேதி விஜயதசமி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறை புதன் மற்றும் வியாழக்கிழமை வருகிறது. ஆனால், 3ம் தேதி வெள்ளிக்கிழமை, அரசு வேலை நாளாக உள்ளது. அடுத்து 4ம்தேதி சனிக்கிழமை, 5ம் தேதி ஞாயிறு அரசு விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே, 3ம் தேதி விடுமுறை நாளாக அரசு அறிவித்தால், ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும்.
பண்டிகையை முன்னிட்டு வெளியூர், சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ள அரசு ஊழியர்களும் செல்ல முடியாத நிலையே உள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக அக்டோபர் 3-ம் தேதியும் அரசு விடுமுறை என அறிவித்து, தொடர் விடுமுறையாக 5 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கும்படி அரசு ஊழியர்கள் சார்பாக தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், அக்.,3ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்ததாக நேற்று தகவல் வெளியானது. இதன்மூலம் சுமார் 5 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.
ஆனால் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை தொடர்பாக இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் (TN Fact Check) தங்களின் சமூகவலைதள பக்கத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில், "வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பான செய்தியை பகிர்ந்து, அக்டோபர் 3 ஆம் தேதி அரசு பொதுவிடுமுறை அல்ல. இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது." என்று கூறியுள்ளனர்.