புதுச்சேரியில் இறந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் தந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கோயில் அறங்காவல் குழு தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அறங்காவலர் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலின் யானை லட்சுமி கடந்த நவம்பர் 30ம் தேதி உயிரிழந்தது. இறந்த யானை உருளையன்பேட்டை போலீஸ் சரகம் ஜே வி எஸ் நகரில் செட்டி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இங்கு மறைந்த லஷ்மி யானைக்கு பக்தர்கள் தினந்தோறும் மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
யானையின் தந்தங்களை மணக்குள விநாயகர் கோயிலில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் பலரும் கோரிக்கை வைத்தபடி இருந்தனர். பொதுமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில், 4 மாதங்களுக்கு பிறகு யானையின் தந்தங்களை வனத்துறை அதிகாரி வஞ்சுள வள்ளி ஸ்ரீதர் முதல்வர் ரங்கசாமியிடம், இன்று ஒப்படைத்தார். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட தந்தங்களை முதல்வர் ரங்கசாமி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலையில் அருள்மிகு மணக்குள விநாயகர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன் மற்றும் குழுவினரிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் லட்சுமி யானையின் தந்தங்கள் பொதுமக்கள் பார்வைக்காக கோயில் உட்புறத்தில் வைக்கப்பட்டு தினந்தோறும் பூஜை செய்யப்படும் எனும் எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவி வருகிறது.