

ராணி இரண்டாம் எலிசபெத், பிரிட்டனின் மகாராணியாக தனது 25வது வயதில் 1952ஆம் ஆண்டு பதவியேற்றார். தனது 70 ஆண்டுகளாக ஆட்சியில் இதுவரை 15 பிரிட்டன் பிரதமர்களை அவர் பார்த்துள்ளார். தனது ஆட்சி காலத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அவர் எதிர்கொண்டுள்ளார். ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கியிருந்த 96 வயதான பிரிட்டன் மகாராணி எலிசபெத்திற்கு உடல் நல குறைவு ஏற்பட்டது சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த எலிசபெத் ராணி சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் புதிதாக அச்சிடப்படும் 5 டாலர் நோட்டுகளில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப் படத்தை நீக்க உள்ளதாக அந்நாட்டு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அரசு சமீபகாலமாக பழங்குடி இன மக்கள் வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்பொருட்டு ஆஸ்திரேலியாவில் இனி புதிதாக அச்சிடப்படும் 5 டாலர் நோட்டுகளில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப் படத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பழங்குடி இன மக்களின் கலாச்சார வரலாற்றைப் பிரதிபலிக்கும் சின்னம், 5 டாலர் நோட்டில் இடம்பெறும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் அரச தலைவர் என்ற முறையில், ராணி இரண்டாம் எலிசபெத் பலமுறை அந்நாட்டிற்கு சென்றுவந்திருக்கிறார். ஆஸ்திரேலிய மக்களுடன் இவருக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் தலைவர் பதவியில் இருந்து ராணியை நீக்குவதற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனினும், அது பின்னர் தோற்கடிக்கப்பட்டது. ராணி மறைவை அடுத்து ஆஸ்திரேலியாவின் தலைவராக அரசர் 3-ம் சார்லஸ் அறிவிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த 2021இல் பழங்குடிகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அந்நாட்டின் தேசிய கீதத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ஆங்கில காலனி ஆதிக்கத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் வரலாறு தொடங்குவதாக தேசிய கீதத்தில் அா்த்தம் தந்த வாா்த்தை நீக்கப்பட்டது. ஆஸ்திரேலிய தேசிய கீதத்தில் நாங்கள் இளமையாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறோம் என்ற தொடருக்கு பதிலாக, 'நாங்கள் அனைவரும் ஒன்று மற்றும் சுதந்திரமானவர்கள்' என்ற வரி சேர்க்கப்பட்டது.
எங்களை பின்தொடர:
Google News, Mangayar Malar Facebook, Mangayar Malar Instagram
Add KalkiOnline as a preferred source on Google... Click Here