ராஜீவ் காந்தி நினைவு நாளில் தமிழகம் வருகை தரும் ராகுல் காந்தி!

ராஜீவ் காந்தி நினைவு நாளில் தமிழகம் வருகை தரும் ராகுல் காந்தி!

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்பூதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்தபோது விடுதலைப் புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

‘பாரத ரத்னா’ விருது பெற்ற ராஜீவ் காந்தி இந்தியத் திருநாட்டின் ஆறாவது பிரதமராகப் பதவி வகித்தவர். இவரது தாயார் இந்திரா காந்தி தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1984ம் ஆண்டு ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 40 என்பதால் இந்தியாவின் இளம் பிரதமர் என்ற பெருமை இவருக்கு உண்டு. தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்த வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டவர் ராஜீவ் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வருடம் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தன்று தமிழகம் வருகை தர இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி.

ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினத்தை ஒட்டி தமிழகம் வருகை தரும் ராகுல் காந்தி, ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள ஸ்ரீபெரும்பூதூருக்குச் சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com