

பிரதமர் நரேந்திர மோடி நார்வே ,ஸ்வீடன், டென்மார்க், ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணத்தினை மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் இறுதி கட்டமாக பிரதமர் மோடி நேற்று இத்தாலி நாட்டை வந்து அடைந்தார்.
வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், தூய்மையான எரிசக்தி மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் போன்ற இணைப்பு திட்டங்கள் ,ஆகியவற்றில் இத்தாலி உடனான ஒத்துழைப்பை அதிகரிப்பதை இந்த பயணம் நோக்கமாக கொண்டுள்ளது.
2025-2029 ஆம் ஆண்டுக்கான இந்தியா - இத்தாலி கூட்டு மூலோபாய செயல் திட்டத்தின் படி, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்த பயணம் உதவுகிறது. இந்த பயணத்தின் போது பிரதமர் மோடிக்கு இத்தாலியின் சார்பில் மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது. இத்தாலி பிரதமர் மெலோனி இந்தியப் பிரதமரை வரவேற்று தனது காரில் ரோம் நகரத்தை சுற்றி காட்டினார்.
இந்த சந்திப்பின் போது இத்தாலி பிரதமருக்கு, மோடி அவர்கள் மெலோடி என்கிற சாக்லேட்டை பரிசாக அளித்தார். முன்பு ஒரு முறை இவர்கள் சந்திப்பின்போது இத்தாலிய பிரதமர் , "வெல்கம் டு மெலோடி டீம்" என்று ஒரு காணொளியை பதிவிட்டு இருந்தார். அவர் மெலோனி + மோடியை சேர்த்து தான் மெலோடி டீம் இந்த வார்த்தையை பயன்படுத்தினார்.
அதை நினைவில் வைத்து இந்திய பிரதமர் இந்த சந்திப்பின் பொழுது பார்லே நிறுவனம் தயாரித்த மெலோடி சாக்லேட்டை பரிசாக அளித்தார். இந்த பரிசிற்கு நன்றி தெரிவித்து மெலோனி ஒரு காணொளியை அவரது X தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலிய பிரதமருக்கு பரிசளித்ததை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் , மல்லிகார்ஜுனா கார்கேவும் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
தனது X தள பதிவில், நாட்டில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் "கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும்போது" பிரதமர் "சிரித்துக்கொண்டே ரீல்களைப் படம்பிடித்துக் கொண்டிருந்தார்" என்று ராகுல் பதிவிட்டிருந்தார். மேலும் "இந்தியர்களின் தலைக்கு மேல் ஒரு பொருளாதார புயல் உருவாகியுள்ளது. ஆனால், இந்திய பிரதமரோ இத்தாலியில் இனிப்புகளை விநியோகம் செய்து கொண்டிருக்கிறார்.
நாட்டில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் என அனைவரும் கண்ணீர் விடுகின்றனர். — பிரதமர் மகிழ்ச்சியுடன் காணொளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். பாஜகவினர் அதற்கு கைதட்டிக் கொண்டிருக்கின்றனர். இது தலைமைத்துவ பண்பு அல்ல இது ஒரு கேலிக் கூத்து என்று ராகுல் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த பாஜகவை சேர்ந்த , மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் " இந்தியாவையும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையும் ராகுல் காந்தி எதற்காக இந்த அளவிற்கு வெறுக்கிறார்? ’மேட் இன் இந்தியா' மற்றும் 'லோக்கல் கோஸ் குளோபல்' போன்றவற்றின் மூலம், இந்தியா இன்று உலகின் நம்பகத் தன்மை மிகுந்த நாடாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு இந்திய சாதனையிலும் ஏதேனும் ஒரு பிரச்சனையை எதிர்பார்க்கிறது.
பிரதமர் மோடியின் தலைமையில் , இந்தியா பல்லாண்டு காலமாக எதிர்பார்த்த உலகளாவிய மரியாதை, நம்பிக்கை, முதலீடு ஆகியவற்றை பெற்று வருகிறது. இதை ராகுல் காந்தியால் தாங்கிக் கொள்ள இயலவில்லை! " என்றும் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.