ஜெய்ப்பூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த தியா குமாரி, ராஜஸ்தான் மாநில முதல்வராக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், முதல்வர் பதவி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
இப்பதவிக்கான போட்டியில் 2 முறை முதல்வர் பதவி வகித்துள்ள வசுந்தரா ராஜே (70) முதலிடத்தில் உள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக அம்மாநிலத்தின் பாஜகவின் முகமாக இருந்து வருகிறார். இவர் 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் செகாவத் (56), அர்ஜுன் ராம் மேக்வால் (69), கட்சியின் மாநில தலைவர் சி.பி.ஜோஷி (48), மக்களவை உறுப்பினர் பாபா பாலக்நாத், ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளவரசி தியா குமாரி உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.
ஜெய்ப்பூர் மாகாணத்தின் கடைசி மன்னர் இரண்டாம் மான் சிங்கின் பேத்திதான தியா குமாரி (52). இவரது தந்தை பவானி சிங் ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். தாய் பத்மினி தேவி. கடந்த 2013-ல் பாஜகவில் சேர்ந்த தியா குமாரி, அதே ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் சவாய் மாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ராஜ்சமந்த் தொகுதியில் போட்டியிட்டு 5.51 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தலில் ஜெய்பூரின் வித்யாநகர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது பெயரும் முதல்வர் பதவிக்கான பரசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் கூறும்போது, “பாஜக மக்களுக்காக சேவை செய்கிறது என்பது பொதுமக்களுக்கு தெரியும். பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும், வேலை வாய்ப்பை உருவாக்கும், விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்து அரசுதான் வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்” என்றார்.
தியா குமாரி 2013 இல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு பேரணியில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி முன்னிலையில் பா.ஜ.க.வில் சேர்ந்தார். இவரை அரசியலில் அறிமுகப்படுத்தியதே முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேதான்.
2013 ஆம் ஆண்டு மாதவ்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு தரப்ப்ட்டடது. தேர்தலில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ.வானார். இவரை வெளியிடத்தைச் சேர்ந்தவர் என்று மக்கள் கருதினாலும், பின்னர் இவரின் சமூக சேவையை கண்டு மக்கள் இவரை ஆதரித்தனர். அதன் பின் தொகுதி வளர்ச்சிப் பணிகள் மூலம் மக்களிடம் செல்வாக்கு பெற்றார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு ராஜ்சமந்த் மக்களவைத் தொகுதியில் பா..ஜ.க. வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று எம்.பி.யானார்.
இந்த நிலையில் 2023 தொகுதியில், பிரதமர் மோடியின் விருப்பதுக்கு இணங்க வித்யாநகர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சீதாராம் அகர்வாலை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இவரை அரசியலில் அறிமுகப்படுத்திய பெருமை வசுந்தரா ராஜே சிந்தியாவைச் சேரும் என்றாலும் பின்னாளில் இவருக்கும் இடையே கருத்து மோதல்கள் உருவானது. ராஜஸ்தானில் வசுந்திராவின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த சரியான நபர் இவர்தான் என்பதால் தியா குமாரியை முதல்வராக்குவது குறித்து பா.ஜ.க. மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.