எங்க குலசாமி ரஜினி... பூஜை அறையில் ரஜினியை வணங்கும் பக்தர் – வைரலாகும் வீடியோ!

எங்க குலசாமி ரஜினி... பூஜை அறையில் ரஜினியை வணங்கும் பக்தர் – வைரலாகும் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினியை தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் நன்கு அறிவார்கள். அவரின் ஸ்டைலும் உழைப்பும் இன்னும் அவரிடம் இருக்கும் ஏதோ ஒன்று அனைவரையும் அவரிடம் கவர்ந்து இழுக்கிறது என்கின்றனர் ரஜினியின் ரசிகர்கள். அவரது ரசிகர்களுள் தீவிர ரசிகர்கள் பலர் உண்டு. மதுரையை சேர்ந்த ஒருவர் தீவிர ரசிகர் என்ற நிலையையும் தாண்டி தீவிர பக்தர் எனும் நிலையை அடைந்துள்ளார்.

ஆம் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் திருமணம் தகவல் மையம் நடத்தி வருகிறார். தனது அலுவலகத்தில் ஒரு அறையை  ரஜினிக்கு என்று ஒதுக்கி அதை பூஜை அறையாக மாற்றி அதில் ரஜினியின் புகைப்படங்களை வைத்து வணங்கி வருவது. மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டு பண்ணி உள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தின் இவரைப் பற்றிய காணொளிப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பூஜை அறையின் அழகிய கதவுகளில் “அருள்மிகு ரஜினி கோவில்” என்று எழுதி தரிசன நேரம் காலை 6 முதல் மாலை ஆறு என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த அறை முழுவதும் ரஜினியின் அன்றைய “அபூர்வ ராகங்கள்” முதல் இன்றைய “ஜெயிலர்” படம் வரையிலான அத்தனை புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. அது மட்டும் இன்றி தெய்வங்களுக்கு நாம் செய்யும் அபிஷேகம் ஆராதனைகள் அனைத்தும் ரஜினியின் படத்துக்கு அவர் செய்கிறார். காலை மாலை என இரு நேரமும் பூஜைகளை செய்யும் அவர் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பால், இளநீர், பன்னீர், தயிர், சந்தனம், என பலவகையான அபிசேகங்களுடன் பழங்களைப்படைத்து கற்பூர தீபாராதனையுடன்  சிறப்பு பூஜையும் செய்கிறார்.

இதுபற்றி கார்த்திக் கூறும் போது “நான் துணை ராணுவப்படையில் பணியாற்றியவான். ரஜினியின் மாவீரன்  படத்திலிருந்து அவரின் ரசிகனாக இருந்தேன். நாளடைவில் அவர் சொல்லும் உண்மையான விஷயங்களும் அவரின் உழைப்பும் என்னைக் கவர அவரின் தீவிர பக்தனாகவே மாறி விட்டேன். இந்த 72 வயதிலும் நம்பர் ஒன் ஆக 2k கிட்ஸ் முதல் எல்லோரையும் கவர்வது சூப்பர் ஸ்டார்தான். என் குலசாமியாகத்தான் ரஜினியை நினைத்து வழிபடுகிறேன். எனக்கு ஏதாவது நல்ல விசயங்கள் நடக்க வேண்டும் என்றால் ரஜினியை வணங்கி விட்டுச் சென்றால் அது நிச்சயம் நடக்கும். 48 வருசங்களா இந்தத் துறையில் யாரும் அசைக்க முடியாத இடத்தில இருப்பது ரஜினி மட்டுமே“ என்று சொல்லி இருக்கிறார்.

ஜெயிலரின் வெற்றிக்காகவும் ரஜினியின் இமயமலைப் பயணத்தின் வெற்றிக்காகவும் இவர் இந்தக் கோவிலில் 301 விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்திருப்பது குறிப்படத்தக்கது.

குஷ்புவுக்கு கோவில் கட்டிய நம் தமிழகத்தில் இது புதிய செய்தி அல்ல. இருக்கும் மனிதர்  ஒருவரை தெய்வமாக வழிபடுவது என்பது இயற்கையை மீறிய ஒரு செயல்தான் என்றாலும் இந்த தீவிர ரஜினி பக்தரின் செயல் நமக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் உண்டு பண்ணுகிறது என்றால் அது மிகையல்ல.

கடந்த ஐந்து வருடங்களாக ரஜினியை சந்திக்க வேண்டும் என்று கடிதங்கள் அனுப்புவதாகவும் இன்னும் எந்த பதிலும் வரவில்லை என்றும் எப்படியாவது ஒருமுறை ரஜினியை சந்தித்து விட வேண்டும் என்றும் ஒரு வேண்டுகோளாகவே விடுக்கிறார் இந்த ரஜினி பக்தர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com