

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோருவதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரின் மகன் அன்புமணிக்கு இடையிலான மோதலை அடுத்து, அக்கட்சி இரண்டாக உடைந்தது. கட்சியின் சின்னமான மாம்பழத்தை உரிமை கொண்டாடி, இரு தரப்பினரும் தலைமை தேர்தல் கமிஷனிடம் முறையிட்டனர். இறுதியில், மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கப்பட்டது.
இது தொடர்பாக ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடாமல், உச்ச நீதிமன்றத்தை நாடியது ஏன்' என, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன்பாக, சின்னத்திற்கு தடை விதிக்க வேண்டும். மாம்பழம் சின்னத்தை பொறுத்தவரை, அது ஒரு கட்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னமாக இல்லாமல், இலவச சின்னங்கள் பட்டியலில் உள்ளது. அப்படி இருக்கும் போது, யார் முதலில் வருகின்றனரோ, அவர்களுக்கு தேர்தல் கமிஷன் முன்னுரிமை தர வேண்டும். இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய ராமதாசுக்கு உத்தரவிட்டனர்.
தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டு ஐகோர்ட்டும் விரைந்து இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில் மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோருவதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி வழக்கு தாக்கல் செய்ய உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்க ராமதாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.