
சென்னையில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டிருப்பதாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்திருக்கும் பேட்டியில், ''சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, கதீட்ரல் சாலையில் தமிழ்நாடு அரசு தோட்டக் கலை துறைக்குச் சொந்தமான 23 ஏக்கர் நிலம் இருந்தது. கடந்த 1910ம் ஆண்டு தோட்டக்கலை சங்கத்துக்காக அரசு இந்த இடத்தை வழங்கியது. காலப்போக்கில் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி எனப்படும் அதிமுக பிரமுகர் கைக்கு இந்த இடம் சென்றது. அந்த இடத்திற்கு அவர் பட்டா பெற்று ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார். இதை அறிந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி கடந்த 1989ம் ஆண்டு 17 ஏக்கர் நிலத்தை சட்டப்படி மீட்டார்.
அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்துக்குப் பின் மீதியுள்ள நிலத்தை மீட்க அதிமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்த சட்டப் போராட்டத்தின் காரணமாக மீதமுள்ள (115 கிரவுண்ட்) 6 ஏக்கர் நிலம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்று மீட்கப்பட்டு இருக்கிறது. இதன் அரசு மதிப்பீடு 500 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. சந்தை மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்த இடத்தை முழுவதுமாக அரசு கையகப்படுத்தி சீல் வைக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல், சென்ற ஒரு மாதத்துக்கு முன்பு வேளச்சேரி பகுதியில் தனியார் ஒருவரின் ஆக்கிரமிப்பில் இருந்த 63 கிரவுண்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுபோன்று, தமிழகத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் அரசால் மீட்கப்படும்'' என்று அவர் கூறி உள்ளார்.