

குமரி கடல் பகுதிக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிக்கும் நிலையில், இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் சனிக்கிழமை மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது..கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் சனிக்கிழமை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் நவம்பர் 29 ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் அதிகன மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.