
சென்னையில் நடைபாதைகளை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் புதிய முயற்சியாக, சென்னை மாநகராட்சி (GCC) அதன் 15 மண்டலங்களிலும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய திட்டதை தொடங்கியுள்ளது.
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்த முறை மாநகராட்சி, இப்பணியில் நிலையான தன்மையையும் பொறுப்புடைமையையும் உறுதிசெய்யும் விதமாக விரிவான செயல் திட்டத்தைப் பற்றிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
வடசென்னை (NSC Bose Road)சாலை, புரசைவாக்கம், தி. நகர் (T Nagar), ராயப்பேட்டை ஆகிய வணிக மையட நகரங்கள் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்பு நீண்டகால சவாலாக உள்ளது. ஆக்கிரமிப்பால் நடைபாதையைப் பயன்படுத்த முடியாமல், பாதசாரிகள் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வாறான நேரங்களில் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் உதவிப் பொறியாளர்களுக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதில் அனுமதிக்கப்பட்ட விற்பனை மண்டலங்களைத் (designated vending zones) தவிர, மற்ற நடைபாதை ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து வரைபடத்தில் குறிக்க வேண்டும். அந்தப் பட்டியலை மண்டல வாரியாக ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டமிடலுக்காக, உதவிச் செயற்பொறியாளர்களுக்கு அனுப்ப வேண்டும்.’என்று கூறியுள்ளார்.
காய்கறி, பழங்கள், இதர பொருட்களை விற்கும் தற்காலிக விற்பனையாளர்கள் மளிகைப் பொருட்கள், தளவாடங்கள், பாத்திரங்கள் போன்ற பொருட்களை நடைபாதையில் பரப்பி வைக்கும் கடைகள் ஆகியவை தெளிவாக இனம் காணப்பட்டு, மாநகராட்சி செயலியில் (GCC app) பதிவேற்றப்படும் என்றும் ஆணையர் தமது ஆணையில் தெரிவித்துள்ளார்.
அமலாக்கக் குழுவினர் ஆக்கிரமிப்புகளின் புவி-குறியிடப்பட்ட (geo-tagged) புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்வார்கள். பாதிக்கப்படும் கடைகளுக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்பட்டு, அடுத்த நாள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும் தெரிகிறது.
மாநகராட்சி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காக வாகனங்கள் மற்றும் பணியாளர்களை மண்டலங்களின் மக்கள் அடர்த்திக்கேற்ப பிரித்துள்ளது. குறைந்த மக்கள் அடர்த்தி மண்டலங்கள் (மண்டலம் 1 முதல் 3 வரை - திருவொற்றியூர்-மாதவரம் வரை) மண்டலத்திற்கு 1 லாரி வழங்கப்படும். அதிக மக்கள் அடர்த்தி மண்டலங்கள் (மண்டலம் 4 முதல் 15 வரை - தண்டையார்பேட்டை-சோழிங்கநல்லூர் வரை) ஒவ்வொரு ஆக்கிரமிப்பு அகற்றும் குழுவுக்கும் ஒரு டிப்பர் லாரி, ஒரு பாப் கேட் இயந்திரம் மற்றும் 4 பணியாளர்கள் வழங்கப்படும். அகற்றப்படும் பொருட்கள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.