

மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு, கடந்த டிசம்பர் 22-ம் தேதி கடற்கரையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையில், மெரினாவில் தலைவர்களின் நினைவிடங்களுக்குப் பின்புறம் உள்ள பகுதியையும் 'நீலக்கொடி' (Blue Flag) சான்று பெற்ற கடற்கரையாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இத்தகைய சான்று பெற்ற பகுதிகளில் எவ்விதக் கடைகளையும் அமைக்கக் கூடாது என்றும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
தற்போது உழைப்பாளர் சிலையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர். சாலையில் இருந்து பார்க்கும்போது கடலின் அழகை ரசிக்க முடியாத அளவுக்குக் கடைகள் மறைப்பதாகக் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் கிடையாது என்பதைச் சுட்டிக்காட்டினர். எனவே, தற்போது 1,417 கடைகளை அமைப்பதற்கு மாநகராட்சி வைத்துள்ள திட்டத்தை மறுஆய்வு செய்து, கடைகளின் எண்ணிக்கையை மிகக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
கடற்கரை என்பது மக்கள் இயற்கையை ரசிப்பதற்கான இடமே தவிர, அதனை 'ஷாப்பிங் மாலாக' மாற்ற முடியாது என்று நீதிபதிகள் விமர்சித்தனர். உணவுப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் பேன்சி பொருட்கள் விற்பனை செய்யும் அத்தியாவசியக் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும், மற்ற தேவையில்லாத கடைகளை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினர்.
கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, புதிய வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்குக் கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில் வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். அதுவும் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.தற்போது உள்ள கடைகளை அகற்றிவிட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து குலுக்கல் முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு. தலா 100 உணவகம், பொம்மை மற்றும் பேன்சி கடைகள் அமைக்க அனுமதி கொடுக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.