

திமுக சார்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தீர்ப்பு வெளியான நிலையில், மூன்று நீதிபதிகள் சரியானது என்றும், இரு நீதிபதிகள் சரி இல்லை என்றும் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் தாக்கல் செய்த மனுவில், 10% இட ஒதுக்கீடு என்பது ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது என்ற கடுமையான வாதத்தை முன் வைத்துள்ளது. இந்த வழக்கை திறந்தவெளி வழக்கு விசாரணையாக நடத்த வேண்டும். பொதுவாக சீராய்வு மனுக்கள் நீதிபதியின் அறையில் வைத்து நடைபெறும். ஆனால் அப்படி நடக்கக்கூடாது என்ற முக்கியமான கோரிக்கையையும் திமுக முன்வைத்துள்ளது.
இந்த சட்டத்தினால் 133 கோடி இந்திய குடிமக்களும் பாதிக்கப்படுகின்றனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரிடையே பாகுபாட்டை உருவாக்கக்கூடியதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது.
அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும் எதிராக இந்த இட ஒதுக்கீடு இருக்கிறது. முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது என்பது, சமத்துவம் என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கிறது என திமுக மனுவில் குறிப்பிட்டுள்ளது.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here