போக்குவரத்தில் ஒரு புரட்சி - பெங்களூருவில் வர இருக்கும் பறக்கும் டாக்ஸிகள்!

Flying Taxi
Flying taxi
Updated on

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை இயக்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் சமீபத்தில் மின்சார பறக்கும் டாக்சிகளை உருவாக்கவும் தொடங்கவும் சர்லா ஏவியேஷன் உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

பெங்களூருவில் ஏர்டாக்ஸி சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனால் பயணிகள் நகரத்திலிருந்து விமான நிலையத்திற்கு பல மணிநேர நெரிசல் மற்றும் தாமதங்களைத் தவிர்த்து சில நிமிடங்களில் பயணிக்க முடியும்.

இவர்கள் இணைந்து மின்சாரத்தில் இயங்கும் ஹெலிகாப்டர் போன்ற பறக்கும் சாதனத்தில் பயணிகள் சேவையை தொடங்க உள்ளனர். இந்த விமானம் ஹெலிகாப்டர்களைப் போல செங்குத்தாகச் செல்லவும், பறக்கவும் தரையிறங்கவும் செய்யும். இதற்கு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது.

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து நகரத்திற்குச் செல்ல, இரண்டரை மணிநேரம் ஆகிறது. இந்த பறக்கும் டாக்சியில் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு பயணிக்கு தோராயமாக ரூ.1,700 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம். பெங்களூரு போன்ற நகரங்களில் இது பெரிய தொகை அல்ல.

சர்லா ஏவியேஷன் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அட்ரியன் ஷ்மிட், தங்களது திட்டம் பயண நேரத்தை வெறும் 5 நிமிடங்களாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறினார். “தற்போது, ​​இந்திராநகரில் இருந்து விமான நிலையத்திற்குச் செல்ல 1.5 மணி நேரம் ஆகும். சர்லா ஏவியேஷனின் முற்றிலும் மின்சார பறக்கும் டாக்சிகள் மூலம், அதை மிக விரைவில் ஐந்து நிமிடங்களாகக் குறைப்போம், ”என்று அவர் சமீபத்திய லிங்க்ட்இன் இடுகையில் எழுதியுள்ளர்.

கர்நாடகாவில் உருவாக்கப்பட்ட இந்த முயற்சியானது, ஏழு இருக்கைகள் கொண்ட மின்சார eVTOL விமானத்தைப் பயன்படுத்தி, நகரத்திலிருந்து விமான நிலையத்திற்குச் செல்வதற்கான பயண நேரத்தை சில நிமிடங்களாகக் குறைக்கும். இது விரைவான, தூய்மையான மற்றும் திறமையான போக்குவரத்திற்கு வழிவகுக்கும் என்று சர்லா ஏவியேஷன் தெரிவித்துள்ளது.

இந்த மின்சார விமானங்கள் பயணத்திற்கு விரைவான மற்றும் நிலையான மாற்றுகளை வழங்குவதன் மூலம் விமான போக்குவரத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் விமானி உட்பட ஏழு பயணிகளை ஏற்றிக்கொண்டு மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கும்.

பயணங்களுக்கு இடையில் சார்ஜ் செய்ய 15 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். இதன் அதிகபட்ச வரம்பு 160 கிலோமீட்டர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், 20 முதல் 40 கிலோமீட்டர் வரை உள்ள நகரப் பயணத்திற்கு இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அதிவிரைவான பயணத்திற்கு பறக்கும் டாக்சி!
Flying Taxi

இந்தியாவின் மிகவும் பரபரப்பான நகரங்களான பெங்களூரு, மும்பை, டெல்லி மற்றும் புனே ஆகிய நான்கு நகரங்களில் விமான டாக்சிகளை பொதுமக்களுக்கு பொதுவான போக்குவரத்து முறையாக மாற்றும் நோக்கத்துடன் முக்கிய கவனம் செலுத்தி இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டாக்ஸிகள் நகரத்தின் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும். நகர்ப்புற ஏர் டாக்சிகள், சரக்கு விநியோகம் மற்றும் அவசர மருத்துவ சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் சர்லா ஏவியேஷன் கருதுகிறது. அவர்கள் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு நகர்ப்புற வளர்ச்சியை எளிதாக்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குகின்றனர்.

செயல்பாட்டு திறன், குறைந்த கார்பன் உமிழ்வு மற்றும் அளவிடக்கூடிய உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் விமானப் போக்குவரத்து செயல்படும் விதத்தை மறுவரையறை செய்வதே அவர்களின் நோக்கம். மின்சார பறக்கும் டாக்சிகள், நிலையான விமானப் போக்குவரத்துக்கான உலகளாவிய தரநிலைகளுடன் இணைந்திருக்கும் அதே வேளையில், நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனில் ஒரு புதிய அளவுகோலை நிச்சயமாக அமைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com