

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் ரூபாய் 10,000 QR CODE டோக்கன் தருவதாக வந்த புகார் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவீந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதாவது சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோவுக்கு ஆதரவாக வாக்களிக்க ஒவ்வொரு வீட்டிற்கும் QR Code டோக்கன்கள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக அதில் தெரிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பின் QR Code பயன்படுத்தி ரூபாய் 10,000 பெற்றுக்கொள்ளலாம் என அதிமுகவினர் கூறுவதாக மனுவில் புகார் அளித்துள்ளார்.
இன்று காலை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர, இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியதால் வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம். இந்த டோக்கன் விநியோகம் தொடர்பான புகார் காரணமாக, தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.