

அரசு ஆஸ்பத்திரியின் அலட்சிய அறுவை சிகிச்சையின் காரணமாக பெண்ணின் வயிற்றுக்குள் கத்திரிக்கோல் வைத்து தைத்த அதிர்ச்சி சம்பவம் தற்போது எக்ஸ்ரே பரிசோதனையில் அம்பலமாகி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளராக வேலை பார்த்து வரும் உஷா ஜோசப் கேரள மாநிலம் ஆலப்புழா புன்னபுரா பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை 2021 ஆம் ஆண்டு மே மாதம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நடந்தது. வீடு திரும்பிய நாளிலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலியுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். பலமுறை அதே மருத்துவமனையை வயிற்று வலிக்காக நாடியுள்ளார். ஆனால் மருத்துவர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
பிறகு வயிற்று வலி குணமாகுவதற்காக பல ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றும் வலி குறையாமல் இருந்தது. வருடக் கணக்கில் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வந்ததால் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்பட்டதுடன், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறியது. இதனால் பயந்துபோன அவர் உடனடியாக சிறுநீரக மருத்துவரை சென்று பார்க்க, அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனை முடிவில் தான் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. 10 சென்டிமீட்டர் நீளமுள்ள அறுவை சிகிச்சை கத்திரிக்கோல்(Artery forceps) பெண்ணின் வயிற்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அவர் எக்ஸ்ரே பரிசோதனை முடிவுகளுடன் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். டாக்டர்கள் தங்கள் அலட்சிய சிகிச்சை பற்றி அறிந்ததும் பதற்றம் அடைந்தனர். அத்துடன் இது தொடர்பாக யாரிடமும் எதைப்பற்றியும் கூற வேண்டாம் என்று கூறி அனுப்பினர். இந்த விஷயம் பூதாகரமானது. அப்பெண்ணோ அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற விரும்பவில்லை. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார்.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இந்த அலட்சிய சிகிச்சை குறித்து நிபுணர் குழு மூலம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இதற்கு தேவையான உதவிகள் மற்றும் அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றுக் கொள்வதாக வேணுகோபால் எம்.பி. உறுதியளித்துள்ளார்.
இதேபோல், கடந்த 2017 இல் கோழிக்கோட்டில் ஹர்ஷினா என்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.