‘அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி’ செல்லூர் ராஜூ விமர்சனம்!

‘அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி’ செல்லூர் ராஜூ விமர்சனம்!

மீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒதுக்கவில்லை’ என்று பேசி இருந்தார். அண்ணாமலையின் இந்தப் பேச்சு அதிமுகவினர் பலரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அதிமுக – பாஜகவினர் ஒருவரையொருவர் விமர்சித்து வருவதால் இவ்விரு கட்சிகளின் கூட்டணியே கேள்விக்குறியாகி வருகிறது. இந்த விமர்சனப் போரில் தன்னை விமர்சித்த செல்லூர் ராஜூவை, ‘அரசியல் விஞ்ஞானி’ என அண்ணாமலை பேசி இருந்தார்.

இந்த நிலையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளர் செல்லூர் ராஜூ இது குறித்து அண்ணாமலையை விமர்சனம் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. செல்லூர் ராஜூ தனது விமர்சனத்தில், “பாஜக ஒரு தேசியக் கட்சி. அந்தக் கட்சியின் கூட்டணி உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள்தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப்படையில்தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷாவும் முக்கியம் என்றேன். ‘நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன்’ என்று அண்ணாமலை என்னைக் கூறுகிறார். அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டில் தலைவராகப் பதவியேற்று இருக்கிறார். ஆனால், நான் அப்படி அல்ல. ஆரம்பத்தில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர், வட்ட செயலாளர், பகுதி செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆனேன். அதேபோல், மக்கள் பதவிகளில் கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், அதன்பின் அமைச்சர் ஆனேன்.

இன்றைக்கு அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கிறேன். எனக்கு எல்லாப் பதவிகளும் படிப்படியாகத்தான் வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருக்கிறேன். என்னைப் பற்றியும், நான் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் மதுரை மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றாகத் தெரியும். நான் அண்ணாமலையின் கருத்துக்களை எல்லாம் பொருட்படுத்துவதில்லை. நான் ஏற்கெனவே கூறியபடி, எங்கள் மீது துரும்பு எறிந்தால் கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம். தமிழகத்தில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அ.தி.மு.க.தான். அதேபோல் 2 கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்சி அ.தி.மு.க.தான். எனவே, அ.தி.மு.க.வை விமர்சிப்பவர்கள், தமிழக அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதனை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com