சித்த மருத்துவர் ஷர்மிகா விவகாரம்! சித்த மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தில் இன்று விசாரணை!

சித்த மருத்துவர் ஷர்மிகா விவகாரம்! சித்த மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தில் இன்று விசாரணை!
Updated on

சென்னை அரும்பாகக்த்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தில் இன்று காலை ஷர்மிகா ஆஜராகி அவரது சர்ச்சை கருத்துக்கள் குறித்து அவரே விளக்கம் அளித்து வருகிறார்.

சித்த மருத்துவர் ஷர்மிகா மருத்துவ அறிவுரைகள் என்ற பெயரில் யூட்யூப்பில் கொடுத்து வந்த சில அறிவுரைகள் சமூக வலைதளத்தில் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கள் சமூக வலைத்தளத்தினரால் ட்ரோல் செய்யப்பட்டு, இது குறித்து பல்வேறு மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அவரும் சளைக்காமல் அதற்கு பதிலளித்து பல வீடியோ பதிவிட்டு வந்தார்.

அவரது மருத்துவ கருத்துக்களான நல்லவர்களுக்கு மட்டுமே குழந்தை பிறக்கும், நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும், குப்புறப் படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், மாட்டுக்கறி சாப்பிட்டால் பல நோய்கள் வரும், 1 குலோப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும், என பல்வேறு சர்ச்சை மிகுந்த கருத்துகளை யூட்யூப்பில் தெரிவித்து வந்தார். இது குறித்து அவரது சக சித்த மருத்துவர்களே கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். பொது மக்களிடமிருந்தும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. இது குறித்து பலரும் சித்த மருத்துவ துறைக்கும் பல்வேறு புகார்களை அனுப்பியுள்ளனர்.

இந்த வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது தவறான தகவலை பரப்புகிறார் என்று புகார் வந்தது. இதனையடுத்து, சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. 15 நாட்களுக்குள் இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை அரும்பாகக்த்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தில் இன்று காலை ஷர்மிகா ஆஜரானார். மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அவரும் பதிலளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

logo
Kalki Online
kalkionline.com