சிக்கிமில் பேறுகால  விடுப்பு ஒரு வருடமாக நீட்டிப்பு: மாநில அரசு அதிரடி!

சிக்கிம் மாநில  முதல்வர் பிரேம் சிங் டவாங்
சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் டவாங்

சிக்கிம் மாநிலத்தில் பணியாற்றும் அரசு பெண் பணியாளர்களுக்கான போறுகால விடுப்பு ஒரு வருட காலம் நீட்டிப்பு செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மகப்பேறு காலங்களில் பெண்கள் ஓய்வெடுப்பதற்காகவும், குழந்தையின் ஆரோக்கிய நலனை கருதியும் பல்வேறு மாநில அரசாங்கங்கள் பெண் அரசு பணியாளர்களுக்கு மகப்பேறு காலங்களில் பேறுகால விடுப்பு திட்டத்தை செயல்படுத்தி வழங்கி வருகின்றன. தனியார் நிறுவனங்களும் குறிப்பிட்ட மாதம் வரை ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிக்கிம் மாநில சட்டமன்றத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் பிரேம் சிங் டவாங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிக்கிம் மாநிலத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களின் மகப்பேறு கால நலனை கருதி ஆறு மாதக் காலம் வழங்கப்பட்டு வந்த பேறுகால விடுப்பு ஒரு வருடமாக நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் அதிகரிக்க உதவும். மேலும் ஒரு வருட விடுப்புக்காலத்திலும் முழுமையான ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது பேறுகால விடுப்பு எடுக்கும்  பெண் பணியாளர்களின் கணவர்களுக்கும் ஒரு மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் அரசு அதிகாரிகள் மாநிலத்தின் நலனை பாதுகாக்கவும், மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு முதல் அரசு பெண்  பணியாளர்களுக்கான பேறுகால விடுப்பு ஒரு வருடமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com