

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் இன்று சட்டசபை கூட்டம் நடந்தது. அவர் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த சூழலில் நாளைய தினம் (மே 12) சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளும் கட்சியான தவெக சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றச் செயலாளர் அலுவலகத்தில் அவர் தனது மனுவை சமர்ப்பித்தார்.
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ஜேசிடி பிரபாகருக்கு அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவும் கிடைக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இன்று மாலையுடன் அவகாசம் முடிந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகிறார். துணை சபாநாயகராக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிசங்கர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் கருப்பையா அறிவிக்க உள்ளார்.