"இப்படி பேசுவது ஒரு முதல்வருக்கு அழகல்ல"!

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

பிகாரில், கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தவர் நிதிஷ்குமார். பின்னர் பா.ஜ.க. கொடுத்த நெருக்கடியாலும், பா.ஜ.க.வின் திரை மறைவு வேலைகளைக் கண்டு கூட்டணியை முறித்துக் கொண்டு லாலுவின் ராஷ்ட்ரீய ஜனத்தாளத்துடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்துக் கொண்டு பிகாரில் முதல்வராகத் தொடர்கிறார்.

கூட்டணியில் முறிவு ஏற்பட்டதிலிருந்தே பா.ஜ.க.வினரும் நிதிஷ்குமாரும் ஒருவர் மீது மற்றொருவர் கடுமையான விமர்சனங்களை கூறிவருகின்றனர்.

புதிய கூட்டணியிலுமே லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிமீது ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் 2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இதர அரசியல்கட்சிகளை பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று திரட்டும் முயற்சியில் நிதிஷ் ஈடுபட்டு வருகிறார்.

பிகார் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியதால் பெண் வாக்காளர்களை கவர்ந்திழுத்த நிதிஷ்குமார் அண்மையில் வைஷாலியில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “பெண்கள் கல்வி அறிவு பெற்றால்தான் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும். ஆண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு என்றால் என்னவென்று தெரியாது” என்று கூறியுள்ளார்.

இன்னும் ஒருபடி மேலலேபோய், "ஆண்களுக்கு இது விஷயத்தில் எந்த பொறுப்பும் கிடையாது. மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்பு குறித்தெல்லாம் ஆண்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், பெண்கள் கல்வி கற்றால் அவர்களுக்கு தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? (கர்ப்பமாகாமல் இருப்பது எப்படி?) என்பது தெரியும்" என்று பேசி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

முதல்வர் இந்த பேச்சு அநாகரீகமானது என்று பா.ஜ.க. பொதுச் செயலாளர்களில் ஒருவரான நிதிஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்வி கற்கவேண்டும் என்பது சரி… ஆனால், அதற்காக ஆண்களை ஏன் இழிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜக.வின் மற்றொரு தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சாம்ராட் செளதிரி, நிதிஷ்குமார், புத்தியில்லாமல் அநாகரீகமாக பெண்களை தரக்குறைவாக பேசியுள்ளார். இப்படிப், பேசுவது ஒரு முதல்வருக்கு அழகல்ல என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com