

ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என அனைத்தையும் கடந்தது தான் காதல். இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் அன்பை, காதலை தங்களுக்கு மிகவும் பிடித்த, மனம் கவர்ந்தவர்களுடன் கொண்டாடி வருகின்றனர். இந்தச் சிறப்பு தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி தளத்தில் பிரத்யேக 'டூடுல்' (Doodle) ஒன்றை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச அளவில் சிறப்பு வாய்ந்த நாட்களை பொதுவாக கூகுள் நிறுவனம் சிறப்பாக கொண்டாடி வருகிறது. அந்த வகையில் காதலர் தினத்திற்கு கூகுள் அதன் தேடுபொறியில் புதிய டூடுலை மாற்றி அமைத்துள்ளது. இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் கூகுள் நிறுவனம் பண்டிகை காலங்கள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களிலும் கூகுள் அதன் தேடுபொறியில் புதிய டூடுலை அமைத்து சிறப்பிக்கும்.
பொதுவாக காதலர்கள் தினம்தோறும் காதலை வளர்த்தாலும் காதலர் தினத்தை தங்களுடைய ஸ்பெஷல் தினமாகக் கருதி உற்சாகமாக கொண்டாடுவார்கள். கடற்கரை, பூங்கா, மால் போன்ற வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களில் காதலர்கள் இன்றைய தினம் அதிக அளவில் கூடி தங்களுடைய அன்பை பரிமாறிக் கொள்வதுடன் பரிசுகளையும் பரிமாறிக் கொள்வார்கள். கூகுளும் காதலர் தினத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி புதிய டூடுல்களை வெளியிட்டு சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.
இது பற்றி கூகுள் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது: இன்றைய டூடுல் காதலர் தினத்தை கொண்டாடுகிறது. கையால் செய்யப்பட்ட பரிசுகளின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. நீங்கள் ஒரு இதயபூர்வமான குறிப்பை எழுதினாலும், சுவையான விருந்தை தயார் செய்தாலும் அல்லது ஒரு சிறப்பு உணவுக்கு தயார் செய்தாலும், அக்கறை கொண்டவர்களைக் கொண்டாட இது ஒரு அற்புதமான வாய்ப்பு. காதலர் தின வாழ்த்துக்கள்! என்று தெரிவித்துள்ளது.
கையால் செய்யப்பட்ட பரிசுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், கடிதம் எழுதுதல், விருப்பமான உணவைச் சமைத்தல் போன்ற செயல்கள் மூலம் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதே இந்த டூடுலின் மையக்கருத்தாக அமைந்துள்ளது.