மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்ய சமந்த் (17) இந்தியாவின் 83-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் பியெல் செஸ் போட்டியில் பங்கேற்றுள்ள அவர், இந்திய நேரப்படி புதன்கிழமை 9-வது சுற்றை விளையாடத் தொடங்கிய நிலையில் கிராண்ட் மாஸ்டருக்கான தகுதிகளை பூர்த்தி செய்தார்.
கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற ஒரு செஸ் வீர்ர் மூன்று தகுதிளை பூர்த்தி செய்வதுடன், 2500 ஈலோ தரவரிசை புள்ளிகளையும் பெற்றிருக்க வேண்டும். அதாவது சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) அங்கீகரித்த போட்டிகளில் சிறப்பான இடத்தை பெற்றிருக்க வேண்டும்.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அபுதாபி மாஸ்டர் போட்டியில் முதல் தகுதியை பூர்த்தி செய்த ஆதித்யா, பின்னர் அதே ஆண்டு டிசம்பரில் ஸ்பெயினில் நடைபெற்ற எல்.லோபி ரெக்கார்டு ஓபன் போட்டியின் மூலம் 2-வது தகுதியையும் பூர்த்தி செய்தார். தற்போது பியெல் செஸ் போட்டியில் 9-வது சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் 3-வது தகுதியையும் பெற்றார். ஆதித்யாவின் ஈலோ புள்ளிகளும் இப்போது 2525 என உள்ளது.
இளம் சாம்பியன்: இதனிடையே ஃபிடே தர வரிசையில் இடம்பிடித்திருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த 5 வயது சிறுவனான தேஜஸ் திவாரி.
உத்தரகண்டில் நடைபெற்ற மறைந்த தீரஜ் சிங் ரகுவன்ஷி ஓபன் செஸ் போட்டியில் விளையாடிய தேஜஸ் திவாரி, தனது முதல் தரவரிசை புள்ளிகளை (1,149) பெற்றதாக ஃபிடே தெரிவித்துள்ளது. யுகேஜி படிக்கும் சிறுவன் தேஜஸுக்கு அவரது தந்தை பயிற்சி அளித்து வருகிறார்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் செஸ் விளையாடுவதைக் கண்ட தேஜஸ் திவாரி, மூன்றரை வயதிலிருந்தே செஸ் விளையாடுவதில் ஆர்வம் காட்டியதுடன் 4 வயதிலேயே மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளார். பின்னர் தேசிய போட்டிகளிலும் ஆடத் தொடங்கியுள்ளார்.