‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு’ இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் மொயின் அலி அறிவிப்பு!

‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு’ இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் மொயின் அலி அறிவிப்பு!

ஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிய இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் ஆட்டக்காரர் மொயின் அலி, இந்த டெஸ்ட் தொடரோடு தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இப்படி அவர் அறிவித்திருப்பது இது இரண்டாவது முறை ஆகும். ஏற்கெனவே 2021ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் மொயின் அலி. அதையடுத்து இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கேட்டுக்கொண்டதால் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் மொயின் அலி விளையாடினார்.

இந்த நிலையில், ‘ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நடப்பு ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிதான் தனது கடைசி டெஸ்ட் போட்டி’ என மொயின் அலி அறிவித்து இருக்கிறார். இது குறித்து கூறிய மொயின் அலி, “இந்தத் தொடர் நல்லதொரு கம்பேக் ஆக அமைந்தது. மேலும், மறக்க முடியாத தொடராகவும் அமைந்தது. ஓய்வை அறிவித்த பிறகு மீண்டும் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவேன், விக்கெட் வீழ்த்துவேன் என நான் நினைக்கவில்லை. ஓய்வில் இருந்து வெளிவரச் சொல்லி கேப்டன் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்த காரணத்தால் விளையாட வந்தேன். ஆனால், இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதை டெலிட் செய்து விடுவேன்” என மொயின் அலி தெரிவித்து இருக்கிறார்.

நடப்பு ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவிய மொயின் அலிக்கு 36 வயது. இவர், 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 3,094 ரன்கள் குவித்து இருக்கிறார். 201 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். தற்போது இரண்டாவது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயின் அலி அறிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com