ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெறும் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.
ஸ்பெயின் ஹாக்கி சம்மேளனத்தின் நூற்றாண்டையொட்டி அந்த நாட்டில் சர்வதேச ஹாக்கிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளில் இந்திய ஹாக்கி ஆடவர், மகளிர் அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்திய மகளிர் அணி புதன்கிழமை முதல் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஹோலி ஹன்ட் ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 41-வது நிமிடத்தில் இந்தியாவின் லாம்ரெம்சியாமி ஒரு கோல் போட்டார். ஆனால், அதன் பிறகு இரு அணிகளுக்கும் கோல் போடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ஆட்டம் 1-1 ன்ற கோல் கணக்கில் டிராவானது.
இதையடுத்து இந்திய மகளிர் அணி ஸ்பெயின் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்திய ஆடவர் அணிக்கும் ஸ்பெயின் அணிக்கும் நடைபெற்ற மற்றொரு போட்டியில் 1-2 என்ற கணக்கில் இந்தியா, ஸ்பெயினிடம் தோல்வி கண்டது. ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீர்ர் பாவ் குனில் முதல் கோலை அடித்து அணியின் கணக்கை தொடங்கினார். தொடர்ந்து 33-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீர்ர் ஜாவ்கின் மெனினி மற்றொரு கோலை அடித்ததை அடுத்து ஸ்பெயின் முன்னிலை பெற்றது.
இந்த நிலையில் இந்தியாவுக்காக கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 59-வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். அதன் பிறகு கோல் போடுவதற்கு இந்திய அணி பலமுறை முயற்சித்தும் பலன் ஏற்படவில்லை. இதையடுத்து 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் ஆடவர் அணி வென்றது. அடுத்த ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்துடன் மோதுகிறது.