இது முடிவல்ல.. ஆரம்பம்; மெஸ்ஸி அசத்தல் அறிவிப்பு!

லியோனல் மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரை அர்ஜென்டினா வென்ற நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியை உலக கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கத்தார் போட்டித் தொடருடன் ஓய்வு பெறுவதாக முன்னர் மெஸ்ஸி அறிவித்திருந்த நிலையில், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுமாறு அவரது தீவிர ரசிகர்கள் வலியுறுத்தினர், இதையடுத்து அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்புவதாக நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

 உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி (35), கால்பந்து போட்டியின் கடவுளாகவே அவரது ரசிகர்களால் பார்க்கப் படுகிறரர்.  அவர் முன்னதாக செய்த அறிவிப்பில் தெரிவித்ததாவது:

 எனது உலகக் கோப்பை பயணத்தை, கத்தார் போட்டித் தொடருடன் முடித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் அடுத்த போட்டித் தொடர் வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். இந்த தொடரோடு முடித்துக் கொள்வதே சிறந்தது' என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வெற்றிக்குப் பின் பேசிய மெஸ்ஸி, 'நான் அர்ஜென்டினா அணியில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை. தொடர்ந்து இந்த சாம்பியன் அணிக்காக விளையாட விரும்புகிறேன். உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளை அனுபவிக்க விரும்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்றதைக் கொண்டாடி வரும் மெஸ்ஸியின் ரசிகர்கள், அவரது இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com