ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் அவர் 12-21, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜாங் யீ மானிடம் தோல்வி அடைந்தார். இருவர் இடையிலான ஆட்டம் 32 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது.
ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்ற சிந்து நடப்பு ஆண்டில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார். இந்த ஆண்டு அவர் 13 உலக சுற்றுப்பயண போட்டிகளில் பங்கேற்று விளையாடியிருக்கும் நிலையில் அதில் 7-வது முறையாக முதல் சுற்றுடன் வெளியேறியிருக்கிறார். சர்வதேச தரவரிசையிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மறுபுறம் இளம் வீராங்கனை மாளவிகா பன்ஸோத் 7-21, 15-21 என்ற கணக்கில் ஜப்பானின் அயா ஒஹோரியிடம் தோல்விகண்டார். ஆடவர் ஒற்றையர் போட்டியில் லக்ஷயா சென் 21-15, 12-21, 24-22 என்ற கணக்கில் சக இந்தியரான பிரியன்ஷு ரஜவத்தை வீழ்த்தினார். மற்றொரு இந்தியரான மிதுன் மஞ்சுநாத் 21-13, 22-24, 18-21 என்ற கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கிடம் தோல்வி அடைந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி கூட்டணி 21-16, 11-21, 21-13 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் லியோ ராலி கர்னாண்டே, டேனியல் மார்டின் ஜோடியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.