சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி:  சென்னையில் இன்று தொடக்கம்!

சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி:  சென்னையில் இன்று தொடக்கம்!

Published on

சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து முடிந்ததையடுத்து இப்போது முதல் முறையாக சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.

 இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

சர்வதேச ஓபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டி இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது.

செப்டம்பர் 18-ம் தேதி வரை ஒரு வாரம் நடைபெறும் இந்த போட்டியில் சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த போட்டிகளுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மைதானம் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மகளிர் டென்னிஸ் போட்டிகள் ஒற்றையர் இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது.

இதில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும் இரட்டையர் பிரிவில் 32 வீராங்கனைகளும் மோதவுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் 26 வீராங்கனைகள் நேரடியாக தகுதி சுற்றுக்கும் மீதமுள்ள 6 வீராங்கனைகள் வைல்டு கார்டு தகுதி சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப் படுவர்.

இந்த வைல்டு கார்டு சுற்றுக்கான போட்டிகள் இன்று நடைபெறுகிறது. இதில் 2 தமிழ்நாட்டு வீரர்கள் உட்பட 5 இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

-இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது. இந்திய அளவில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அங்கிதா ரெய்னா மற்றும் கர்மன் தாண்டி ஆகியோருக்கு வைல்டுகார்டு மூலம் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்வதேச ஓபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டி தொடரில் வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு 2 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com