மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு1 எனவும் கைப்பற்றியது.
மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. முதல் இரு போட்டிகளிலும் தலா ஓர் வெற்றியை இரு அணிகளும் பெற்ற நிலையில், தொடர் வெற்றியை தீர்மானிக்கும் 3 ஆவது போட்டி டிரினிடாடில் நடைபெற்றது.
டாஸ் வென்று மேற்கு இந்திய தீவுகள் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ரன்களை குவித்தனர். குறிப்பாக இஷான் கிஷன், 64 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். ஷூப்மன் கில் 85 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சஞ்சு சாம்சனும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் அதிரடியாக அரை சதம் விளாச, இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது.
கடினமான இலக்கை நோக்கி விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி, அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. 10 ஆவது வீரராக களம் கண்ட குடகேஷ் மோட்டி அதிகபட்சமாக 39 ரன்களை எடுத்தார். அந்த அணி, 35.3 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 200 ரன்களில் தோல்வியடைந்தது.
இந்தியா தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 13-வது முறையாக தொடர்ந்து மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை வென்று சாதனைப் படைத்தது.