குஜராத் டைட்டன்ஸ்-மும்பை இந்தியன்ஸ்! சிஎஸ்கேவுடன் இறுதிப் போட்டியில் மோதப்போவது யார்? ஒரு பார்வை!
ஐபிஎல் 2023 போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்றைய 2வது குவாலிஃபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இன்றைய ஆட்டம், நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு பலமாகவே இருக்கிறது.
மும்பை அணியைப் பொறுத்தவரை ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதேபோல் குஜராத் அணி கடந்த வருடம் ஐபிஎல் சீசனில் காலடி பதித்தாலும், அதிரடி ஆட்டத்தால் சாம்பியன் பட்டத்தையும் வென்றது. இந்த ஐபிஎல்-லில் பிளே ஆஃப் சுற்றில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. இருந்தாலும் இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் சில போட்டிகளில் மும்பை அணி தோல்வியை சந்தித்தாலும், பின்னர் வெற்றிப் பாதையை நோக்கி பயணித்து வருகிறது. இஷன் கிஷன், ரோகித் சர்மா, கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், வதேரா என மும்பை அணியின் பேட்டிங் வரிசை பலமாகவே இருக்கிறது. ஆனால் ரோகித் சர்மா இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், இன்னும் அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

அதேபோல் மும்பை அணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் இதுவரை இந்த ஐபிஎல்-லில் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதிலும் அவர் கடைசி இரண்டு போட்டிகளில், ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் போட்டியில் 4 விக்கெட்டுகளையும், பிளே ஆஃப் சுற்றில் லக்னோ அணிக்கெதிராக 3.3 ஓவர்களில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இவர் இவரது சிறப்பான பந்து வீச்சும் மும்பை அணிக்கு பக்கபலமாக அமையும்.
அதேபோல், குஜராத் அணியிலும் விரிதிமன் சாஹா, சுப்மன் கில், பாண்டியா, டேவிட் மில்லர், விஜய் ஷங்கர் என பேட்டிங் வரிசையும், பவுலிங்கில் முகம்மது ஷமி, ரஷித் கான் இருவரின் சிறப்பான பந்துவீச்சு என இரு அணிகளும் பலமாகவே உள்ளது.

இதுவரை இந்த இரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் மும்பை அணியும், ஒருமுறை குஜராத் அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த ஐபிஎல்லில் இரு அணிகளும் மோதிய நிலையில், சூர்யகுமார் யாதவ் குஜராத் அணிக்கெதிராக சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுமே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதோடு, இரண்டு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாகத்தான் தற்போது வலம் வருகிறது. அதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளில் எந்த அணி வேண்டுமானாலும் வெல்ல வாய்ப்பு உள்ளது.
எது எப்படியிருந்தாலும், இந்த போட்டியும் சரி இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணியுடனான போட்டியும் சரி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.