ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, மூன்றாவது டி-20 ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது சூர்யகுமார் யாதவின் அதிரடி ஆட்டம்தான். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சூரியகுமார் 44 பந்துகளை சந்தித்து 83 ரன்கள் குவித்து ஹீரோவானார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்த ஆண்டு 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் தமது ஆட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார்.நேற்றைய போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சூர்யகுமார் 83 ரன்கள் குவித்தார். திலக் வர்மா கடைசிவரை அவுட்டாகாமல் 49 ரன்கள் எடுத்தார்.
உண்மையைச் சொல்வதானால் ஒருநாள் போட்டிகளில் என்னுடைய ஆட்டம் மோசமாகவே இருந்தது. இதை ஒப்புக்கொள்வதற்கு நான் வெட்கப்படவில்லை என்றார் சூர்யகுமார். நாம் அனைவரும் நேர்மையை பற்றி பேசினாலும் நேர்மையாக இருக்க வேண்டும். ஆனால், எப்படி முன்னேறுவது என்பது முக்கியமானது. ரோகித் சர்மாவும், ராகுல் திராவிடும் என்னிடம் ஒருநாள் போட்டியில் நீங்கள் சரியானபடி ஆடவில்லை.
நீங்கள் நன்றாக விளையாட வேண்டும். எனவே சிந்தித்து செயல்படுங்கள் என்று கூறினார்கள். நீங்கள் கடைசி 10-15 ஓவர்களில் விளையாடினால், அணியின் வெற்றிக்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்து விளையாட வேண்டும். அதுதான் என் மனதில் இருந்தது. எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை வாய்ப்பாக எண்ணி விளையாடினேன் என்றார் அவர்.
டி20 சர்வதேச போட்டிகளில் அவரது துடிப்பான ஆட்டம் அவருக்கு பாராட்டுகளை பெற்றுத்தந்தது. 51 டி-20 போட்டிகள் மற்றும் 49 இன்னிங்ஸில் அவர் 1,780 ரன்கள் எடுத்துள்ளார். அதாவது சராசரியாக 45.64 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை மூன்று சதங்கள் மற்றும் 14 முறை அரை சதம் எடுத்துள்ளார். 2022 இல்ல ஐ.சி.சி. டி20 சர்வதேச போட்டியில் சிறந்த வீர்ர் விருதையும் வென்றுள்ளார்.
ஆனால், 26 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 24 இன்னிங்ஸில் சூர்யகுமார் 511 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதாவது சராசரியாக 24.33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இரண்டு முறை மட்டும் அரை சதம் எடுத்துள்ளார்.இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால் ஒருநாள் சர்வதேச போட்டியில் முதல் 6 இன்னிங்ஸில் அவர் 261 ரன்கள் அதாவது சராசரியாக 65.25 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு அரைசதங்களும் அடங்கும். கடைசியாக 2022 இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவர் அரை சதம் எடுத்தார்.
அதன் பின் அவரது ஆட்டம் சோபிக்கவில்லை. 18 இன்னிங்ஸ் விளையாடி வெறும் 250 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதாவது சராசரியாக 14.70 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ரன்கள் 35 தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து மூன்று முறை பூஜ்யம் ரன்களில் அவுட்டானார்.
50 ஓவர் போட்டிகள்தான் சவாலானதாக இருக்கின்ற போதிலும் பெரும்பாலும் டி20 போட்டிகளிலேயே விளையாடியதை அவர் ஒப்புக்கொண்டார். ஒருநாள் போட்டி என்பது சவாலானது. ஒருநாள் போட்டிக்கு ஒருவிதமாக ஆட வேண்டும். விக்கெட்டுகள் சரிந்தால் டெஸ்ட் போட்டி போல் நின்று ஆட வேண்டும். ஆட்டம் முடியும் தறுவாயில் பந்தை அடித்து ஆடி ரன்களை சேர்க்க வேண்டும் என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது ஆட்ட அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. கொஞ்சம் முயன்று ஆடியிருந்தால் இந்த போட்டியில் 100 ரன்களை எட்டியிருக்கலாமே என்று கேட்டதற்கு, சாதனைகளை பற்றி நான் கவலைப்படுவதே இல்லை என்றார் சூர்ய குமார்.