கபில் தேவ்
கபில் தேவ்

விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை மட்டும் நம்பினால் பலனில்லை!! இந்திய அணிக்கு கபில் சொல்லும் யோசனை!

2023 ஆம் ஆண்டும் பிறந்துவிட்டது. "ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் உலக கோப்பை"க்கான நாளும் தினமும் எண்ணப்பட்டு வருகின்றன.

கடந்த சில வருடங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி எந்த உயரத்தையும் எட்டவில்லை. ஆனாலும் அவர்கள் இருவரும் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களாக தொடர்கின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியினர் இந்த சூப்பர் ஸ்டார்களின் ஆட்டத்தை மட்டும் வைத்து கோப்பையை கைப்பற்றிவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காத காரியம் என்றார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.

ஒரு நிகழ்ச்சியில் பேசிய கபில் தேவ், இந்திய அணி இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பையை வெல்லும் நம்பிக்கையுடன் உள்ளது. கோப்பையை வெல்வது என்பது சாதாரணமானது அல்ல. அணியின் பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணியை நிர்வகிப்பவர்கள் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நலன்களுக்கு அங்கு இடமில்லை. நல்ல அணியை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.

விராட் கோலி, ரோஹித் சர்மா அல்லது அணியில் இருக்கும் வேறு இரண்டுபேர் வெற்றியைக் கொண்டுவந்துவிடுவார்கள் என்று நினைத்தால் அது பலன் தராது.

முதலில் உங்கள் அணி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். உங்கள் அணி வலுவாக இருக்கிறதா? நல்ல ஆட்டக்காரர்கள் இருக்கிறார்களா? என்று கேட்டால் வலுவாக இருக்கிறது, நல்ல ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன்.

விராட் கோலி, ஹோஹித் சர்மாவை மட்டும் நம்பியிருக்கக்கூடாது. குறைந்தது 5 அல்லது 6 வீரர்களாவது திறமையை வெளிப்படுத்தி ஆட வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அணியில் இடம்பெற்றுள்ள அனைவருமே பொறுப்புடன் விளையாட வேண்டும். சவால்கள் நிறைந்த போட்டியில் இந்திய அணியினர் முனைப்புக்காட்டி ஆடினால் நிச்சயம் கோப்பையை வென்றெடுக்கலாம் என்றார்.

டி-20 கிரிக்கெட் போட்டியை பொருத்தவரை அணி தேர்வாளர்கள் சீனியர் லெவல் ஆட்டக்காரர்களை தவிர்த்து இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். ஆனால், ஒரு நாள் போட்டித் தொடருக்கு இந்திய அணி விராட் கோலி, ரோஹித் ஆகியோரையே நம்பியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கபில்தேவ், கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாதவர்கள் விளையாட வரவேண்டாம். மன அழுத்தம் என்றெல்லாம் காரணம் சொல்லக்கூடாது. வீரர்கள் தங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டு சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு பெருமை சேர்க்க முன்வர வேண்டும் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com