ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்! இந்த அணியின் வெற்றியால் 6ம் இடத்திற்கு தள்ளப்பட்ட மும்பை அணி!
நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதிய நிலையில், ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் போட்டி 16வது சீசனின் 66வது போட்டியில் நேற்று, பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் களமிறங்கினர். துவக்க வீரர்களின் அதிரடி ஆட்டம் வேகமெடுப்பதற்கு முன்பே பிரப்சிம்ரன், ஷிகர் தவான், டைட், லிவிங்ஸ்டோன் விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் பறிபோயின.
இதனால் 6.3 ஓவரிலேயே 50 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தவித்தது. இதையடுத்து, சாம் கரண், ஷர்மா, ஷாருக்கான் இவர்களின் அதிரடி ஆட்டம் பஞ்சாப் அணியை வலுவான ஸ்கோரை நோக்கி கொண்டு சென்றது.
அதிலும் கடைசி இரண்டு ஓவர்களில், சாம் கரண், ஷாருக்கான் இருவரும் யாரும் எதிர்பார்க்காத நிலையில், பவுண்டரி, சிக்ஸர் என விளாசினர்.
இதையடுத்து பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் களமிறங்கிய நிலையில், ஜாஸ் பட்லர் 4 பந்துகளை சந்தித்த நிலையில், ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்நிலையில், ஜெய்ஸ்வாலுடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 50 ரன்களும், படிக்கல் 30 பந்துகளில் 51 ரன்களும் எடுத்து அரைசதம் கண்டனர். அதேபோல் ஹெட்மையர் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் 46 ரன்களைக் குவித்தார்.
இதையடுத்து ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 189 ரன்களை எடுத்து தனது 7வது வெற்றியை ருசித்தது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 5ம் இடத்திற்கு முன்னேறிய நிலையில், மும்பை அணி 6ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.