சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

மீபத்தில் நடைபெற்று முடிந்த 16வது சீசன் ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக விளையாடியவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் இவர் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தார். இதன் மூலம் இந்திய அணிக்கு எதிர்காலத்தில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் கிடைத்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்த கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பிடித்து இருக்கிறார். இந்தத் தொடரின் முதற்கட்டமாக டெஸ்ட் போட்டிகள் நாளை நடைபெற உள்ளன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும் நிலையில், அதிலிருந்து இந்திய அணி மீண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே ஏற்பட்டு இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத் தொடரில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவினர் சில முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கின்றனர். அதன்படி, புஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதில், விளையாடும் 11 பேர் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பிடித்திருக்கிறார். மிகவும் இளம் வீரரான அவர் மும்பை, மேற்கு மண்டலம் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாளை நடைபெறும் முதல் போட்டியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com