
தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை கடந்த 5-ம் தேதி கைது செய்த இலங்கை அரசு, நிபந்தனைகளுடன் 12 மீனவர்களையும் விடுதலை செய்தது.
கடந்த 5-ம் தேதி விசைப்படகில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
முல்லைத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் அந்த 12 மீனவர்களையும் கைது செய்து, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து திருகோணமலை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருகோணமலை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து திருகோணமலை நீதிமன்ற நீதிபதி முகம்மது பயஸ் உத்தரவிட்டதாவது;
இந்திய மீனவர்கள் 12 பேரும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
- இவ்வாறு நிபந்தனையிட்டு, 12 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 12 பேரும் கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.