

தமிழக அரசியல் களத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த "தேமுதிக எந்தப் பக்கம்?" என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது. பல்வேறு தரப்பினருடன் திரைமறைவுப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, இறுதியில் ஆளுங்கட்சியான திமுக-வுடன் கைகோர்த்துள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்துப் பேசினார். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது தொகுதிப் பங்கீடு மற்றும் முக்கிய நிபந்தனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்தது பெருமகிழ்ச்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த்
அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
என பதிவிட்டுள்ளார்